'கே' ஆன எனக்கு 2 ஐயர் பையன்கள், 2 முஸ்லீம்கள் உள்பட 6 வரன் வந்துள்ளது: ஹரிஷ் ஐயர் அப்டேட்!
மும்பை: நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர், எனக்காக மாப்பிள்ளை தேடி என் தாய் விளம்பரம் கொடுத்துள்ளார் என்று மும்பையைச் சேர்ந்த ஹரிஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த ஓரினச்சேர்க்கையாளர் ஹரிஷ் ஐயர்(36). அவருக்கு ஏற்ற மாப்பிள்ளை தேடி அவரது தாய் பத்மா ஐயர் விளம்பரம் கொடுத்துள்ளார். இந்நிலையில் இது குறித்து ஹரிஷ் கூறுகையில்,
எந்த ஒரு தாயும் தனது மகன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புவது இயற்கையானது. என் தாயும் அப்படித்தான். அவருக்கு 57 வயதாகிறது. அவர் இறந்த பிறகு நான் தனியாக இருந்துவிடுவேனோ என்ற பயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
யாரையாவது காதலிக்கிறாயா? உனக்கு யாரையாவது பிடித்திருக்கிறதா? என்று என் அம்மா என்னிடம் கேட்டார். நான் இல்லை என்றதும் அவர் எனக்கு ஏற்ற பையனை தேடி விளம்பரம் கொடுக்க முடிவு செய்தார்.
எனக்கு வரும் மாப்பிள்ளை சைவப் பிரியராக, விலங்குப் பிரியராக இருக்க வேண்டும். எனக்கு வரும் பையன் ஐயராக இருக்க வேண்டும் என என் பாட்டி விரும்பியதால் விளம்பரத்தில் ஐயர் வீ்ட்டுப் பையன் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என் தாய் எனக்கு பையன் தேடி செய்தித்தாளில் விளம்பரம் கொடுக்க கஷ்டப்பட்டார். சில செய்தித்தாள்கள் எனக்கு மணமகன் தேவை என்ற விளம்பரத்தை வெளியிட மறுத்துவிட்டன. ஆனால் ஒரு நாளிதழ் விளம்பரத்தை வெளியிட்டது. விளம்பரத்தை பார்த்துவிட்டு 6 பேர் என்னை அணுகியுள்ளனர். அதில் 2 ஐயர்கள், 2 முஸ்லீம்களும் அடக்கம் என்றார்.