முட்டை வீச்சுக்கு எல்லாம் நான் அசர மாட்டேன், பாக். நல்ல நாடு தான்: நடிகை ரம்யா
மங்களூரு: முட்டை வீச்சை பார்த்து எல்லாம் நான் பயப்படவும் இல்லை, கவலைப்படவும் இல்லை என்று நடிகை ரம்யா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நரகம் அல்ல, அது ஒரு நல்ல நாடு. நான் பாகிஸ்தானுக்கு சென்று பார்த்துள்ளேன். அங்குள்ள மக்களும் நம்மை போன்றவர்கள் தான் என்று நடிகை ரம்யா தெரிவித்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் மங்களூருக்கு சென்ற ரம்யா மீது முட்டை வீசப்பட்டது. இது குறித்து ரம்யா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
முட்டை வீச்சு
நான் மங்களூருக்கு வந்தவுடன் என் மீது முட்டைகளை வீசினார்கள். கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். இதற்காக எல்லாம் நான் கூறியவற்றை திரும்பப் பெற மாட்டேன். இந்த சம்பவங்களால் நான் கவலை அடையவில்லை.
தேசதுரோக வழக்கு
தேசதுரோக சட்டம் குறித்து நாம் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். என் மீது முட்டை வீசியது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தேசதுரோகி
என் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு பின்னால் அரசியல் சதி உள்ளது. இது குறித்த புகார் முதலில் மீடியாவுக்கு சென்றது எப்படி நடந்தது. நான் தேசத்திற்கு எதிரானவள் என்பதை முதலில் மீடியாவுக்கு தெரிவிக்க வழக்கறிஞர் விரும்பியுள்ளார்.
பாஜக
பாஜகவினர் அவர்களின் கொள்கைகளுக்கு எதிரானவர்களை எதிர்க்கிறார்கள். வலது சாரிகள் மட்டுமே எனக்கு எதிரான தேசதுரோக புகாரை ஆதரிக்கிறார்கள். ரம்யா பாகிஸ்தானை ஆதரிக்கிறார் என்று கன்னட சேனல்கள் பெரிதாக செய்தி வெளியிடுகின்றன. அவர்களையும் குறை கூற முடியாது.