பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டுவோம் என்று மோடியிடம் கூறியுள்ளேன்.. முப்தி
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் சிறந்த வெளிப்படையான ஆட்சியைத் தருவோம். பாகிஸ்தானுடன் நட்பாக இருக்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறியுள்ளேன் என்று புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள முப்தி முகம்மது சையது தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் பாஜக - பிடிபி கூட்டணி இன்று ஆட்சி அமைத்துள்ளது. மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனர் முப்தி முகம்மது காஷ்மீரின் புதிய முதல்வராகவும், பாஜகவைச் சேர்ந்த நிர்மல்சிங் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார்.
காஷ்மீர் முதல்வராக பதவியேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் முப்தி. அப்போது அவர் பேசியதாவது:-
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறந்த ஆட்சியை தருவோம். வெளிப்படையான ஆட்சி முறை இருக்கும். தற்போது ஏற்பட்டுள்ள கூட்டணி, மாநிலத்தின் ஒரு திருப்புமுனையாக இருக்கும் வகையில் செயலாற்றுவோம். எங்களுக்கு கல்வியும், வேலை வாய்ப்பும் தான் மிகப் பெரிய சவாலாக இருக்கும்.
முரண்பாடுகள் இருந்தாலும் கூட சாதகமான முறையில் அதை மாற்றிக் கொள்வதே அரசியலாகும். அதுதான் அரசியல் கலையும் கூட.
2002ம் ஆண்டு காங்கிரஸுடன் நாங்கள் இணைந்திருந்தோம். அப்போது ஜம்மு காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவ பாடுபட்டோம். அப்போது நடந்த தேர்தல் அருமையானது. 2008ம் ஆண்டு எங்களிடம் 21 உறுப்பினர்கள் இருந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மக்களுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்குமாறு இந்த நேரத்தில் மத்திய அரசுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.
கடந்த காலத்தை தோண்டியெடுக்க நான் விரும்பவில்லை. எதிர்காலம் குறித்து மட்டுமே நான் பார்க்கிறேன்.
வட முனையோ அல்லது தென் முனையோ, ஏதாவது ஒன்றுடன் நான் இணைய வேண்டிய நிலை. குஜராத் போல ஜம்மு காஷ்மீரையும் வளர்ச்சி அடைந்த மாநிலமாக்க பாடுபடுவேன். இந்த மாநிலத்தில் அமைதி தவழ வேண்டும்.
இங்குள்ள அனைவருக்கும் அமைதி, நிம்மதி, நியாயம் கிடைக்க வேண்டும். இன்று புதிய அத்தியாயம் மலர்ந்துள்ளது. இது அருமையான சந்தர்ப்பம். வரலாற்றுச் சிறப்புவாய்ந்த தருணம். நாட்டில் உள்ள ஒரே முஸ்லீம் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மட்டும்தான். இங்குள்ள நிகழ்வுகள் மூலம் நாடு முழுமைக்கும் செய்தி கிடைத்துள்ளது.
எங்களால் எவ்வளவு செய்ய முடியும் என்று தெரியவில்லை. ஆனால் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்து செயல்படுவோம்.
1947ம் ஆண்டு முதல் ஒவ்வொரு பிரதமருக்கும் காஷ்மீர் பிரச்சினையாகவே இருந்து வருகிறது. பேச்சுவார்த்தைகளில் ஹூரியத்துகளையும், பிரிவினைவாதிகளையும் கூட சேர்க்கலாம் என்பதே எனது கருத்தாகும். அவர்களுடைய கருத்தையும் கேட்போம். பாகிஸ்தானுடன் நாம் தோழமையாக இருப்போம் என்று பிரதமரிடம் கூறியுள்ளேன்.
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை குறித்த நடவடிக்கையில், முதல்கட்டமாக வெளியுறவுத்துறை செயலாளரை அங்கு அனுப்பி வைக்க உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி என்னிடம் உறுதி அளித்துள்ளார் என்றார் முப்தி முகம்மது சயீத்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குறித்த கேள்விக்கு பதிலளித்த முப்தி, 'லஞ்சத்தை ஒழிப்பதற்காக, மொபைல்போனை பாக்கெட்டில் வைத்து உளவு பாருங்கள் என கெஜ்ரிவால் போல நான் சொல்லமாட்டேன்,' என்றார்.