ஆளும் கட்சிக்கு சாதகமாக நடந்தால் சும்மா விட மாட்டேன்... அரசு அதிகாரிகளுக்கு ரோஜா எச்சரிக்கை
நகரி: ஆட்சியில் இருப்பவர்களுக்கு சாதகமாக, அரசு அதிகாரிகள் ஒருதலைப் பட்சமாக நடக்கக் கூடாது, பதவியில் இருந்து ஓய்வு பெறும் வரை மக்களுக்கு சாதகமாகவே நடந்து கொள்ள வேண்டும் என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக நடிகை ரோஜா உள்ளார். இந்நிலையில், நகரி நகர சபை கூட்டத்தில் நடந்த அரசு ஊழியர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆட்சி என்பது வந்து போகக்கூடியது. ஆந்திராவில் நேற்று காங்கிரஸ் ஆட்சி இருந்தது. இன்று தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. நாளை எங்கள் கட்சி ஆட்சி வரலாம். ஆனால் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் நிரந்தரமானவர்கள். அவர்கள் எந்த ஆட்சிக்கும் அடி பணியாமல் நியாயமாக செயலாற்ற வேண்டும்.
தகுதி இருந்தும் சிலருக்கு அரசு சலுகை கிடைக்கவில்லை. ஆனால் தகுதியே இல்லாதவர்களுக்கு தெலுங்கு தேச தலைவர்கள் சொன்னார்கள் என்பதற்காக சலுகை வழங்குகிறார்கள்.
தேர்தல் நேரத்தில்தான் நான் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் காரி. ஆனால் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்த பிறகு அனைத்து மக்களுக்கு பொதுவானவர். அனைத்து கட்சியினரையும் என் தொகுதி மக்களாகவே பார்க்கிறேன். ஆனால் இங்குள்ள சில அரசு அதிகாரிகள் தெலுங்கு தேசம் கட்சியினருக்கு சாதகமாக நடக்கிறார்கள். இதனை பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன். இதனை அவர்களுக்கு தான் எச்சரிக்கையாக சொல்கிறேன்.
நீங்கள் ஓய்வு பெறும் வரை மக்களுக்கு நியாயமாக செய்யப்பட வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.