விமானப்படையின் சாரங் சாகச அணியில் அசத்தும் பெண் அதிகாரிகள்
டெல்லி: இந்திய விமானப்படையின் பெருமைக்குரிய ஹெலிகாப்டர் சாகச அணியான சாரங்கில் பெண் அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த அணியில் பெண் விமானி ஸ்குவாட்ரன் லீடர் தீபக் மிஷ்ரா, பெண் என்ஜினியரிங் அதிகாரி லெப்டினன்ட் சந்தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தீபிகா மிஷ்ரா கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் விமானப்படை அகாடமியில் இருந்து தேர்ச்சி பெற்றார். அப்போதில் இருந்தே அவருக்கு சூர்யகிரண் மற்றும் சாரங் சாகச அணி மீது நாட்டம் இருந்தது. இதில் ஏதாவது ஒரு அணியில் தானும் ஒரு நாள் சேர்வோம் என்று தீபிகா நம்பிக்கை கொண்டார்.
அப்போது அது நிறைவேறாத கனவாக இருந்தது. இருப்பினும் அவர் நம்பிக்கையை கைவிடாமல் கடவுளிடம் பிரார்த்தனை செய்தார். இந்நிலையில் அவர் ஹெலிகாப்டர் பிரிவில் சேர்க்கப்பட்டு சேட்டக்/சீத்தா ஹெலிகாப்டர் யூனிட்டில் பணியமர்த்தப்பட்டார். பெண் அதிகாரிகள் ஒரு என்ஜின் உள்ள ஹெலிகாப்டர்களை மட்டுமே அப்போது இயக்கினர்.
2010ம் ஆண்டு செய்யப்பட்ட பாலிசி திருத்தங்களின்படி இரண்டு என்ஜின்கள் உள்ள நடுத்தரம் முதல் கனரகம் வரையிலான ஹெலிகாப்டர்களை பெண் விமானிகள் இயக்க விமானப்படை அனுமதி அளித்தது. அப்போது தன்னை ஒரு அதிர்ஷ்டசாலியாக நினைத்தார் தீபிகா.
பரேலி மற்றும் உத்தம்பூரில் சேட்டக் மற்றும் சீத்தா ஹெலிகாப்டர்களை 1, 600 மணிநேரம் இயக்கிய அனுபவத்தை பெற்றார் தீபிகா. இந்நிலையில் சாரங் சாகச அணியில் சேர பெண் விமானிகளை முன்வருமாறு விமானப்படை அறிவித்தது. அவ்வளவு தான் ஸ்குவாட்ரன் லீடர் தீபிகா இந்த புதிய சவாலை ஏற்க முன்வந்தார். கடந்த ஜூலை மாதம் அவர் சாரங் அணியில் சேர்ந்தார்.
தீபிகாவின் கணவர் ஸ்குவாட்ரன் லீடர் சவ்ரப் காக்கர் சாரங் அணியில் என்ஜினியரிங் அதிகாரியாக இருந்ததால் அவர்கள் ஒரு அணியாகிவிட்டனர். சாரங் அணியின் ஒரே பெண் விமானியாக தீபிகா உள்ளார். ஆனால் அவ்வாறு நீண்ட நாட்களுக்கு இருக்க முடியாது. காரணம் பெண் என்ஜினியரிங் அதிகாரி லெப்டினன்ட் சந்தீப் விரைவில் சாரங் அணியில் சேர உள்ளார்.
சாரங் தான் உலகின் இரண்டாவது ராணுவ ஹெலிகாப்டர் சாகச அணி ஆகும். தற்போது பயிற்சி பெற்று வரும் தீபிகா விரைவில் சாரங் அணியோடு சேர்ந்து பறக்க உள்ளார்.
தற்போது பெங்களூரில் நடந்து வரும் விமான கண்காட்சியில் சாரங் அணி தான் ஷோ ஸ்டாப்பர்கள். தற்போது அணியின் பாதுகாப்பு அதிகாரியாக இருப்பதில் தீபிகா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
விமானங்களை பராமரிப்பது தான் மற்றொரு பெண் அதிகாரியான சந்தீப்பின் வேலை. தான் ஹெலிகாப்டரை இயக்குவதை தனது 4 வயது மகள் ஆலியாவிடம் பெருமையாக கூறியுள்ளார் தீபிகா. யார் கண்டார், ஒரு நாள் ஆலியாவும் தாயின் வழியில் விமானப்படையில் சேர்ந்து சாகசம் செய்யலாம்.