கர்நாடகா: மணல் கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி மர்ம மரணம்
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மணல் கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் கர்நாடக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகக் காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல்லை சேர்ந்தவர் டி.கே.ரவிக்குமார்(வயது 35). ஐ.ஏ.எஸ். அதிகாரி. இவரது மனைவி புஷ்பா. கோலார் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த டி.கே.ரவி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் பெங்களூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கோரமங்களா அருகே தாவரகெரெயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் அதிகாரி ரவி தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்தார்.
பெங்களூருவில் கர்நாடக அரசு வணிக வரித்துறை கூடுதல் கமிஷனராக பணியாற்றி வந்தா ரவி, நேற்று காலை 10 மணியளவில் வழக்கம் போல அவர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்து மதியம் வீட்டிற்கு புறப்பட்டு வந்தார். அதன்பிறகு, ரவி வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அவர் தனக்கு வந்த தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலளிக்கவில்லை.
இதனையடுத்து, சந்தேகமடைந்த அவரது மனைவி புஷ்பா மாலையில் வீட்டிற்கு வந்தபோது தன்னுடைய கணவர் படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், அவர் தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இதுபற்றி தனது உறவினருக்கும், போலீசாருக்கும் புஷ்பா தகவல் கொடுத்தார்.
இதுபற்றி கேள்விப்பட்ட காவல்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி, சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனர் அலோக்குமார், துணை கமிஷனர் ரோகினி மற்றும் உயர் அரசு அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அதிகாரி ரவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என காவல் துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து, ரவிக்குமாரின் மரணம் குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
நேர்மையான அதிகாரி
நேர்மையான அதிகாரி எனப் பெயர் பெற்ற ரவிக்குமார் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் பணியாற்றிய போது மணல் கொள்ளையர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
நிலம் ஆக்கிரமிப்பு
அம்மாநிலத்தில் அரசு நிலங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்ததுடன் மாவட்ட வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த முயற்சி மேற்கொண்டார். ரவிக்குமார் கோலார் மாவட்டத்தில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தினர்.
அதிரடி நடவடிக்கைகள்
கோலாரில் இருந்து பெங்களூருக்கு வந்த பிறகும், இங்குள்ள வணிக நிறுவனங்கள் வரி கட்டாமல் ஏமாற்றி வந்ததை கண்டுபிடித்து, அந்த நிறுவனங்களில் சோதனை நடத்தினார். மேலும் பல தனியார் நிறுவனங்களிடம் இருந்து அரசுக்கு வரவேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் வரியை வசூல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
கொலையா? தற்கொலையா?
இதற்கிடையில், ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டிற்கு வணிக வரித்துறை அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு 3 பேர் வந்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும் ரவிக்கு வெவ்வேறு நபர்களிடம் இருந்தும் மிரட்டல் வந்ததாக சொல்லப்படுகிறது. அதுகுறித்தும் போலீசார் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி ஐ.ஏ.எஸ். அதிகாரி வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ரகசிய கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப் போட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மர்ம மரணத்தால் கர்நாடக அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது.