சசிகலாவின் சிறை வீடியோ... செல்போனில் எடுக்கப்பட்டதா? விசாரணையில் இறங்கிய அதிகாரி
அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலா, பெங்களூரு சிறையில் விதியை மீறிய காட்சிகள் வீடியோவாக வெளிவந்து வைரலாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து, விசாரணையை ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தொடங்கியுள்ளார்.
பெங்களூரு: சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் விதிமீறி வெளியே சென்று வந்த காட்சிகள் வீடியோவாக வெளியே வந்து வைரலாக பரவியுள்ளது. இந்த விவகாரம் குறித்து கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
சசிகலா வீடியோ தமிழகம், கர்நாடகம் தாண்டி டெல்லி வரை பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக அரசியலில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ள சசிகலா வீடியோ குறித்து ஆய்வு செய்ய அம்மாநில அரசு உயர்மட்ட விசாரணைக்குழு அமைத்துள்ளது.
அந்தக் குழுவின் தலைவர் வினய் குமார் நேற்று, முறைப்படி விசாரணையை தொடங்கினார். முதல்கட்டமாக கர்நாடக உள்துறை செயலர் சுபாஷ் சந்திராவை சந்தித்து ஆலோசித்த வினய் குமார், டிஐஜி ரூபா அளித்த 2 அறிக்கைகள், டிஜிபி சத்தியநாராயண ராவ் அளித்த 16 பக்க அறிக்கையை பெற்றுக் கொண்டார்.
டிஐஜி அலுவலகத்தில் விசாரணை
பின்னர் கர்நாடக சிறைத்துறை டிஜிபி, டிஐஜி அலுவலகங்களில் நேரடியாக ஆய்வு செய்த வினய் குமார், அங்கிருந்த முக்கிய ஆவணங்களையும் வீடியோ பதிவுகளையும் ஆய்வு செய்தார். அது தொடர்பாக அதிகாரிகள் சிலரிடம் கருத்துக்களையும் கேட்டு அறிந்தார்.
தலைமை கண்காணிப்பாளர் அறையில் சோதனை
அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்ற வினய் குமார், அங்கு தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் அறையில் தீவிர சோதனை நடத்தினார். மேலும் தற்போதைய கண்காணிப்பாளர் அனிதாவிடமும் ஒரு மணி நேரம் விசாரித்தார்.
வாட்ஸ் அப் ஆதாரங்கள் ஆய்வு
அதன் பின்னர் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியான சசிகலாவின் வீடியோ ஆதாரங்களை, விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். தொடர்ந்து, இந்த வீடியோ காட்சிகளை எடுத்தது யார்? அது எப்போது எடுக்கப்பட்டது? என சிறை அதிகாரிகளிடம் விசாரித்தார்.
செல்போனில் எடுக்கப்பட்டதா?
அப்போது சசிகலா இருப்பது போன்ற வீடியோ, சிசிடிவி கேமராவில் இருந்து எடுக்கப்படவில்லை என்றும், செல்போனில் எடுக்கப்பட்டது என்றும் தெரிய வந்தது. இதில் அதிர்ச்சியான அவர், யார் செல்போனில் எடுத்திருப்பார்கள் என்று நேரடியாகவே சிறைத் துறை அதிகாரிகள் மத்தியில் விசாரித்தார்.
இடைக்கால அறிக்கை
முக்கிய வீடியோ ஆதாரங்களை கைப்பற்றிய ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார், ஒரு வாரத்தில் சிறையில் நடந்த விதிமீறல்கள் குறித்து இடைக்கால விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வார் என்று கர்நாடக அரசு வட்டாரத்தில் கூறுகிறார்கள்.