பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூரை சந்தித்த சூதாட்ட தரகர்.. விளக்கம் கேட்கிறது ஐசிசி!
டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூருக்கு, சூதாட்ட தரகருடன் தொடர்புள்ளதா என்று சர்வதேச கிரிக்கெட் சங்கம் விளக்கம் கேட்டுள்ளது.
சூதாட்ட தரகர் கரண் கில்ஹோத்ராவை அனுராக் தாக்கூர் சந்தித்ததாக ஐ.சி.சி. விளக்கம் கேட்டு பி.சி.சி.ஐ. தலைவர் ஜக்மோகன் டால்மியாவுக்கு ஏப்ரல் 22ம் தேதியன்று கடிதம் எழுதியுள்ளது.
சூதாட்ட பட்டியல்
ஐசிசி எழுதியுள்ள கடிதத்தில், பி.சி.சி.ஐ செயலாளராக தேர்வு செய்யப்பட்ட இரண்டொரு நாட்களில் ஐ.சி.சி.யின் ஊழல் மற்றும் பாதுகாப்பு பிரிவின் சூதாட்ட பேர்வழிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள கில்ஹோத்ராவை, தாக்கூர் சந்தித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.
ஐபிஎல் சூதாட்டம்
2014ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் ஆகியோரை தொடர்பு கொள்ள கில்ஹோத்ரா முயற்சி செய்ததாக, ஊழல் மற்றும் பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது என ஐ.சி.சி. அந்த கடிதத்தில் கூறியுள்ளது.
எச்சரிக்கை
பி.சி.சி.ஐ. அமைப்பின் ஊழல் மற்றும் பாதுகாப்பு பிரிவு இயக்குனரான ரவி சவானி 2014ம் ஆண்டிலேயே, பி.சி.சி.ஐ. மற்றும் ஐ.பி.எல். நிர்வாகிகள் யாரும் கில்ஹோத்ராவை தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என கடிதம் அனுப்பியுள்ளதையும் தனது கடிதத்தில் ஐ.சி.சி. சுட்டிக்காட்டியுள்ளது.
பதில் இல்லை
அப்படியிருந்தும் அனுராக் தாக்கூர் தற்போது கில்ஹோத்ராவை சந்தித்துள்ளது என்றும் ஐ.சி.சி. குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், கடிதம் வந்து நான்கு நாட்கள் ஆகியும், பி.சி.சி.ஐ. இன்னும் பதில் அளிக்கவில்லை.