ஐடியா 'செல்'லா வச்சிருக்கீங்க?... ”செகண்ட்ஸ்” அடிப்படையில் இனிக் காசு கறக்கப் போறாங்களாம்!
டெல்லி: ஐடியா செல்போன் நிறுவனம் இனி அனைத்து வகையான ப்ரீபெய்ட் அழைப்புகளுக்கும் செகண்ட்ஸ் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.
15 லட்சம் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் இந்த புதிய நடைமுறைக்கு அடுத்த 30 நாட்களுக்குள் மாற்றப்படுவார்கள் என ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லும் செகண்ட்ஸ் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் முறைக்கு மாறுவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஏற்கனவே செல்ஃபோன் அழைப்பு துண்டிப்பு பிரச்னை தீவிரமடைந்து வருகிறது.
இதற்கு அபராதமாக இலவச நிமிடங்களை வாடிக்கையாளர்களுக்கு தர தொலைபேசி நிறுவனங்களுக்கு உத்தரவிட தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில் இப்பிரச்னையை எதிர்கொள்ளும் வகையில் செகண்ட்ஸ் அடிப்படையிலான கட்டண வசூல் முறைக்கு செல்ஃபோன் நிறுவனங்கள் மாறத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதில் முதலாவதாக ஐடியா நிறுவனம் செகண்ட்ஸ் கணக்கில் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது.