தான் ஒரு மைனர் என்பதை பாக். தீவிரவாதி முகம்மது நவேத் நிரூபித்தாக வேண்டும்...!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் உயிரோடு பிடிபட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதி முகம்மது நவேத் தான் ஒரு மைனர் என்பதை உரிய சான்றுகளுடன் நிரூபிக்க வேண்டும். அப்படியானால்தான் அவனால் இளம் சிறார்களுக்கான சட்டத்தின் மூலம் பெரும் தண்டனையிலிருந்து தப்பும் வாய்ப்பு உள்ளது.
உதம்பூரில் நேற்று காலை பாகிஸ்தான் தீவிரவாதிகள் 2 பேர் அமர்நாத் யாத்ரீகர்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தினர். இதில் இந்தியத் தரப்பில் 2 பேர் பலியானார்கள். தீவிரவாதிகளில் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டான். இன்னொரு தீவிரவாதி, 3 பேரை பிணையாளிகளாப் பிடித்துக் கொண்டு தப்பினான்.
ஆனால் அவனது முட்டாள்தனமான செயல்பாட்டால் பிணையாளிகளே அவனைப் பிடித்து மடக்கி பாதுகாப்புப் படையினரிடம் கொடுத்து விட்டனர். அவன்தான் முகம்மது நவேத்.
முன்னுக்குப் பின் பேச்சு
நவேத்திடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது அவன் முன்னுக்குப் பின் முரணாக பேசினான். தனது பெயராக பல பெயர்களைச் சொன்னான். கடைசியில் அவனது உண்மையான பெயர் முகம்மது நவேத் என்பது தெரிய வந்தது. பைசலாபாத்தைச் சேர்ந்தவன்.
வயதிலும் குழப்பம்
இதேபோல தனது வயதையும் மாற்றி மாற்றிச் சொன்னான் நவேத். முதலில் 20 வயது என்று கூறி விட்டு பின்னர் 18 என்று சொல்லி, பிறகு 16 என்றும் கூறி போலீஸாரைக் குழப்பினான்.
பொய் சொல்கிறான்
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், அவனுக்கு நிச்சயம் 16 வயது இருக்காது. பொய் சொல்கிறான். அவனைப் பார்த்தால் நிச்சயம் 18 வயதுக்கு மேல்தான் இருக்கும். முதலில் விசாரித்தபோது தனக்கு 20 வயதாவதாக அவனே கூறியிருந்தான். அனேகமாக அதுவே உண்மையான வயதாக இருக்கும் என்றார்கள்.
நிரூபிக்க வேண்டும்
போலீஸார் மேலும் கூறுகையில் அவன் போலீஸ் பிடியிலிருந்து விடுபட்டு தனது வீட்டுக்குத் திரும்ப ஆர்வமாக உள்ளான். இதற்காக மாற்றி மாற்றிப் பேசுகிறான். இதற்காக பொய்யாகவும் பேசுகிறான். அவன் தான் ஒரு மைனர் என்றால் அதை அவன்தான் நிரூபிக்க வேண்டும்.
ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்
தனது வயது மைனர் வயதுதான் என்பதை நிரூபிக்க அவன் உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். பிறப்புச் சான்றிதழ் தாக்கல் செய்ய வேண்டும். பாகிஸ்தானில் உள்ள அவனது தந்தை யூசுப் முகம்மதுவிடமிருந்து பிறப்புச் சான்றிதழை அவன் பெற முடியும்.
அரசு உதவும்
தனது பிறப்புச் சான்றிதழை நவேத் பாகிஸ்தானிலிருந்து பெற நிச்சயம் அரசு உதவும். பிறப்புச் சான்றிதழை தன்னால் பெற்றுத் தர முடியும் என்று அவன் கூறினால் நிச்சயம் உதவி செய்வோம்.
தெளிவாகத்தான் ஊடுறுவியுள்ளான்
இந்தியாவில் மைனர் வயதுடையவர்களுக்கு பெரும் தண்டனை கிடைக்காது என்று அவனை இங்கு அனுப்பியவர்கள் இவனுக்குச் சொல்லியிருக்க வேண்டும். அதனால்தான் வயதைக் குறைத்துச் சொல்கிறான்.
உளறி விட்டான்
தான் பாதுகாப்புப் படையினரிடம் பிடிபடுவோம் என அவன் நினைத்துப் பார்க்கவில்லை. இதனால்தான் முதலில் விசாரித்தபோது தனது உண்மையான வயதை அவன் உளறி விட்டான். இப்போது மாற்றிப் பேசுகிறான் என்று போலீஸார் கூறுகின்றனர்.