கடும் உபாதையில் இளவரசி.. தினசரி 25 மாத்திரை சாப்பிடுகிறார்.. வெளி சிகிச்சைக்கு அனுமதி மறுப்பாம்!
பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசி உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க சிறைத் துறை நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டதாம்.
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள இளவரசிக்கு உடல் நலக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய மனுவை சிறைத் துறை நிர்வாகம் நிராகரித்தது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என கர்நாடக நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா தீர்ப்பளித்தார்.
மேலும் 4 பேருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதமும், ஏனையவர்களுக்கு ரூ. 10 கோடி அபராதமும் விதித்தது.
சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஜெயலலிதா. அந்த விசாரணை முடிவடைவதற்குள் அவர் காலமானார். இந்நிலையில் அந்த மனு மீதான விசாரணை கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் வந்தது.
தீர்ப்பு உறுதியானது
அப்போது நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்யப்பட்டது. ஜெயலலிதா உயிருடன் இல்லாததால் அவரது சொத்துகளை விற்று அபராதத் தொகை வசூலிக்கப்படும் என்றும் ஏனைய 3 மூவரும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
இளவரசி மனு
இதைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இ்ந்நிலையில் இளவரசிக்கு நீரிழிவு நோய், ரத்த சோகை, ரத்த அழுத்தம் ஆகியன உள்ளதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என சிறைத் துறை நிர்வாகத்துக்கு மனு தாக்கல் செய்தார்.
கோரிக்கை நிராகரிப்பு
அதை நிராகரித்த சிறைத் துறை நிர்வாகம், சிறையில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் இளவரசி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். உடல் நிலையைப் பரிசோதித்து மருத்துவர்களின் தகவலின்படி, இளவரசி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது குறித்து முடிவு செய்து கொள்ளலாம்.
20 முதல் 25 மாத்திரைகள்
அதுவரை விக்டோரியா மருத்துவமனையில் எப்போது வேண்டுமானாலும் சிகிச்சை பெறலாம் என்று தெரிவித்துவிட்டது. தற்போது இளவரசி 3 வேளையும் சேர்த்து 20 முதல் 25 மாத்திரைகள் வரை உட்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.