வங்கதேசத்தை சேர்ந்த 2 பேருக்கு போலி பாஸ்போர்ட் வாங்கிக் கொடுத்த மும்பை வக்கீலுக்கு வலை
மும்பை: வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் போலி பாஸ்போர்ட் பெற உதவி செய்த மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த ஹபில் ஷேக் மற்றும் மஜீத் காசி மகாராஷ்டிரா மாநிலம் புசாத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு போலி பாஸ்போர்ட் பெற மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உதவியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைபவர்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்துக் கொடுக்கும் கும்பலை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஹபில் ஷேக் மற்றும் மஜீத் காசி ஆகிய வங்கதேசத்தினர் வைத்திருந்தது போலி ஆவணங்கள் என்பது சோதனையில் தெரிய வந்தது. அவர்களுக்கு ஆவணங்கள் எப்படி கிடைத்தது என்று விசாரித்தபோது அவர்கள் மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் உள்பட பலரின் பெயர்களை தெரிவித்துள்ளனர்.
அவர்கள் போலி ஆவணங்களுடன் இந்தியாவுக்குள் நுழைந்து சாலை வழியாக புசாத் வந்துள்ளனர். அவர்களிடம் போலி பாஸ்போர்ட், ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை இருந்தன. அவர்கள் இருவரும் எதற்காக புசாத் வந்தனர் என்பது தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே புசாத்தில் மாட்டிறைச்சி மீதான தடையை எதிர்த்து மஜீத் என்ற வாலிபர் போலீஸ் கான்ஸ்டபிளை கத்தியால் குத்தினார். இதனால் புசாத்தில் போலீசார் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அந்த வழக்கறிஞர் குறித்த விபரங்களை தெரிவிக்குமாறு பார் கவுன்சிலை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். அவர் சிக்கினால் பல விபரங்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.