சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு!
பொருளாதார மந்த நிலை எதிரொலியாக சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி : பொருளாதார மந்த நிலை மற்றும் ஐஎஸ் ஐஎஸ் அமைப்புகளால் ஏற்பட்டுள்ள நிலைமையற்றத் தன்மை காரணமாக வளைகுடா நாடுகளுக்கு பணிநிமித்தமாக செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு சவுதி அரேபியா, குவைத், கத்தார் உள்ளிட்ட 6 நாடுகளுக்கு மொத்தம் 7 லட்சத்து 75 ஆயிரத்து 845 இந்தியர்கள் வேலைக்குச் சென்றிருந்தனர். கடந்தாண்டு புள்ளிவிவரப்படி அந்நாடுகளுக்கு வேலைக்குச் சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 7 ஆயிரத்து 296 பேர் மட்டுமே. சவுதி அரேபியாவுக்கு வேலைக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவிகிதம் குறைந்துள்ளது.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளின் பொருளாதாரம் குறைந்து வருவதால்இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஈராக்-சிரியாவில் ஐ.எஸ் அமைப்புகளால் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை, அந்தப் பிராந்தியங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதும் அங்கு பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
மேலும் அமெரிக்கா பின்பற்றும் உள்நாட்டு மக்களுக்கே வேலைவாய்ப்பில் அதிக பங்களிப்பு என்ற முறையை வளைகுடா நாடுகளும் கையில் எடுப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக சவுதி இந்த முறைக்கு மாறி வருவதும் சவுதிக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.