3 மாதத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு 1947 பேர் மரணம், 33,000 பேர் பாதிப்பு
டெல்லி: நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானேர் எண்ணிக்கை 1947 ஆக உயர்ந்துள்ளது. இந்நோயால் 33 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அப்பாவி மக்களை பதறவைக்கின்றன.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த மார்ச் 23ஆம் தேதிவரையிலான நிலவரப்படி நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் எச்.1 என்1 என்ற பன்றிக்காய்ச்சல் நோய்க்கு 1947 பேர் பலியாகியுள்ளனர். 33 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு பன்றிக்காய்ச்சலுக்கு ஆயிரத்து 763 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு மூன்று மாதங்களுக்கு உள்ளாகவே பலி எண்ணிக்கை இரண்டாயிரத்தை தொட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்தியாவின் வட மாநிலங்களில் டிசம்பர் மாதம் முதலே பன்றிக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருகின்றது. குறிப்பாக குஜராத், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக தீவிரமாக பரவியபடி உள்ளது. வெயில் வந்தும் ஹெச்1என்1 வைரஸின் தீவிரம் குறைந்த பாடில்லை.
பன்றிக்காய்ச்சல்
உலகையே அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் 1920 - 1930-ம் ஆண்டுகளில் பன்றிகளிடம் காணப்பட்டது. ஆரம்பத்தில் பன்றிகளிடம் இருந்து பன்றிகளுக்கு காய்ச்சல் பரவி வந்தது. பின்னர் அந்த வைரஸ் பன்றிகளிடம் இருந்து பறவைகள் என பரவி நாளடைவில் மனிதர்களுக்கு பரவத் தொடங்கியது. அதன்பின் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி உயிர்பலி வாங்கிவருகிறது.
குழந்தைகளுக்கு பாதிப்பு
பன்றிக்காய்ச்சலுக்கு உலகம் முழுவதும் 2 லட்சத்தில் இருந்து 5 லட்சம் பேர் வரை பலியாகி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதில் 5 முதல் 10 சதவிகிதம் வரை இளைஞர்களும், 20 முதல் 30 சதவிகிதம் வரை குழந்தைகளும் உயிரிழப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத்தில் அதிகம்
இந்த ஆண்டு கடந்த மூன்று மாதங்களில் குஜராத் மாநிலத்தில் மட்டும் 415 பேர் உயிரிழந்து விட்டனர். நேற்று ஒரே நாளில் பன்றிக் காய்ச்சலுக்கு அடுத்தடுத்து சிலர் பலியாகவே அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 421 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6459 பேரில் 5854 பேர் பூரண குணமடைந்து, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், 184 நோயாளிகள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் - மகராஷ்டிரா
குஜராத்திற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 403 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். மகராஷ்டிராவில் 360 பேரும், மத்திய பிரதேச மாநிலத்தில் 286 பேரும் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர்.
ஒரு லட்சம் பேர்
இந்தியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2015 மார்ச் 23 வரை பன்றிக்காய்ச்சலுக்கு 6088 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 92,340 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
வீரியமடைந்த வைரஸ்
வழக்கமாகக் குளிர் காலத்தில் வீரியம் கொள்ளும் பன்றிக் காய்ச்சல் பிப்ரவரிக்கு பிறகான கோடைக் காலத்தில் படிப்படியாக வீரியம் இழந்துவிடும். மருத்துவ உலகம் இப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தது. அந்த நம்பிக்கையை முதல் முறையாகத் தகர்த்திருக்கிறது ஹெச்1என்1 வைரஸ்.
வேகமாக பரவும் வைரஸ்
இது தனது தாக்குதலை இந்தியாவில் ஆரம்பித்த 2009 மே முதல் 2011 ஜனவரி வரை அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 29,000 பேர். இறந்தவர்கள் 2,700 பேர். ஆனால், இம்முறை 2015 ஜனவரி முதல் மார்ச் 23-ம் தேதி வரை மட்டுமே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33 ஆயிரம். பலியானோரின் எண்ணிக்கை 1,947. 2,700 பேரைக் கொல்வதற்கு 21 மாதங்கள் எடுத்துக் கொண்ட வைரஸ், இந்த முறை 1,947 பேரைக் கொல் வதற்கு எடுத்துக்கொண்ட கால அவகாசம் வெறும் 85 நாட்கள் மட்டுமே.
மகாராஷ்டிரா
கடந்த 2009 முதல் 2015 மார்ச் 7 ஆண்டுகளில் மட்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 13,743 பேர் வரை பன்றிக்காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் மட்டும் கடந்த 7 ஆண்டுகளில் இந்நோய் தாக்கி 1,271 பேர் பலியாகியுள்ளனர்.
கர்நாடகாவில்
குஜராத்தில் 773 பேரும், ராஜஸ்தானில் 573 பேரும்,கர்நாடகாவில் 366 பேரும் கடந்த 2009 முதல் 2015 மார்ச் வரை பன்றிக்காய்ச்சல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
எது உண்மை?
உயிரிழப்பு அதிகமாவதால் பன்றிக்காய்ச்சல் வைரஸின் வீரியம் அதிகரித்திருக்கிறதா, இல்லையா? என்ற கேள்வி எழுகிறது ஆனால் ‘இல்லை' என்கிறது மத்திய அரசு. ‘அதிகரித்திருக்கிறது' என்கிறார்கள் மருத்துவத் துறை வல்லுநர்கள். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது? என்று அறியாமலேயே சாகிறார்கள் அப்பாவி மக்கள்.