பாபர் மசூதி வழக்கு: அத்வானி, உமா பாரதி மீது சதி திட்ட வழக்கு பதிவு! சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி
லக்னோ: பாஜக மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்ட பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேர் மீது சதி திட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உ.பி.மாநிலம் அயோத்தியில் 16ம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதி, 1992ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 6ந்தேதி கரசேவை நடத்தி தகர்க்கப்பட்டது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒரு வழக்கு, பாபர் மசூதியை இடித்த கரசேவகர்கள் மீதும், மற்றொரு வழக்கு பாபர் மசூதி இடிப்புக்கான குற்றச்சதியில் ஈடுபட்டதாக அத்வானி உள்ளிட்ட 21 தலைவர்கள் மீதும் பதிவு செய்யப்பட்டன.
இதில் முதல் வழக்கில் விசாரணை லக்னோ தனிக்கோர்ட்டிலும், 2வது வழக்கில் ரேபரேலி கோர்ட்டிலும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்றச்சதி வழக்கில் இருந்து அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 21 பேரை ரேபரேலி கோர்ட்டு 2001ம் ஆண்டு விடுவித்தது.
இந்த விடுதலையை அலகாபாத் ஹைகோர்ட்டு 2010ம் ஆண்டு உறுதிசெய்தது. ஆனால் இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கடந்த மாதம் உத்தரவிட்டது. லக்னோ, ரேபரேலி ஆகிய இரு சிபிஐ சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்று வந்த வழக்கை ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதன்படி லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட தலைவர்கள் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவின் படி லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் டெல்லியில் இருந்து இன்று காலை புறப்பட்டு சென்றனர். அத்வானி லக்னோவிலுள்ள விவிஐபிகளுக்கான அறையில் தங்கியிருந்தார். அவரை உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்தார்.
நீதிமன்றத்தில், அத்வானி, உமாபாரதி உள்ளிட்டோர் மதியம் 1 மணியளவில் ஆஜராகினர். முதலில் முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தனர். அதை ஏற்று அவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.
இதையடுத்து, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தங்கள் மீது சதி திட்ட வழக்கு பதிவு செய்ய கூடாது என அத்வானி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர். இதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
சட்டப்பிரிவு 120-பி-ன்கீழ், அத்வானி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளான, 12 பேர் மீதும் சதி திட்ட வழக்கு பதிவு செய்துள்ளது நீதிமன்றம். மசூதியை இடிக்க இவர்கள் சதி செய்தனர் என்பது குற்றச்சாட்டின் சாராம்சமாகும். எனவே 2 வருடத்திற்குள் இந்த வழக்கை நடத்தி முடிக்க நீதிமன்றம் முயலும். வழக்குப்பதிவை தொடர்ந்து அத்வானியின், குடியரசு தலைவர் பதவி கனவு கலைந்துள்ளது.