கர்நாடக சட்டசபையில் இந்தியில் உரையாற்றிய ஆளுநர்- கன்னட அமைப்புகள் போராட்டம்!!
பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் ஆளுநர் வஜூபாய் வாலா முதன் முறையாக நேற்று இந்தியில் உரையாற்றினார். இதற்கு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும், கன்னட அமைப்புகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
கர்நாடக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டு கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் அம்மாநில ஆளுநர் வாஜூ பாய் வாலா சுமார் 40 நிமிடங்கள் இந்தியில் உரையாற்றினார். 24 பக்கங்கள் அடங்கிய அவரது உரை இந்தி, ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் அச்சிடப் பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
இது தொடர்பாக கர்நாடக சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெய சந்திரா பேசும்போது, சட்டசபையில் எந்த மொழியில் பேசுவது என்பதை ஆளுநர் தான் முடிவு செய்வார். அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டசபையில் அங்கீகரிக்கப்பட்ட எந்த மொழியில் வேண்டுமானாலும் பேச அவருக்கு உரிமை இருக்கிறது என்றார்.
ஆளுநரின் இந்தி உரைக்கு காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ சங்கர்லிங்க கவுடா கூறுகையில், ஆளுநர் வஜூபாய் வாலா இந்தியில் பேசியது, கர்நாடகத்தில் மறைமுகமாக இந்தியை திணிக்கும் முயற்சி ஆகும்.
நாட்டில் உள்ள 13 மாநிலங்களில் மட்டுமே இந்தி பரவலாக பேசப்படுகிறது. தென்னிந்திய, வடகிழக்கு மாநிலங்களில் வட்டார மொழிகள்தான் மக்களால் பேசப்படுகிறது. தென் கர்நாடகா, கடலோர கர்நாடகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு 10% கூட இந்தி தெரியாது.
அப்படி இருக்கும்போது இந்தியை உறுப்பினர்கள் மீது ஆளுநர் திணிப்பது ஏன்? ஆளுநரால் ஆங்கிலத்தை பார்த்து படிக்கக் கூட தெரியாதா? தனது நண்பரும் பிரதமருமான மோடி யைப் போலவே, ஆளுநரும் எல்லா இடங்களிலும் இந்தியில் பேசுவது ஏற்புடையதல்ல என்றார்.
இதனிடையே ஆளுநரை கண்டித்து கன்னட சலுவளி கட்சி தலைமையில் பல்வேறு கன்னட அமைப்புகள் சட்டசபையை முற்றுகையிட்டனர். இதில் கன்னட சலுவளிக் கட்சி தலைவர் வாட்டாள் நாக ராஜ் உட்பட பலர் கைது செய்யப் பட்டனர்.
கர்நாடக ரக் ஷன வேதிகே அமைப்பு தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில், பல்வேறு கன்னட அமைப்புகளும், ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களும் கலந்துக்கொண்டன. இதில் ரக் ஷன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கவுடா உட்பட 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.