ஆகா..! இதுவல்லவா உண்ணாவிரதம்.. பள்ளிக்கூடத்தை தரம் உயர்த்தக்கோரி 8வது நாளாக மாணவிகள் பட்டினி!
ஹரியானாவில் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி மாணவிகள் 8வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரேவாரி: ஹரியானாவில் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி மாணவிகள் 8வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் குறைந்தளவு மாணவர் சேர்க்கை உள்ளதால் பள்ளிக்கூடத்தை தரம் உயர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டம் கோதேரா தாப்பா தேகானா கிராமத்தை சேர்ந்த மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் கடந்த புதன் கிழமை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். தங்களின் கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியை மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
உண்ணாவிரதம் இருக்கும் 11, 12-ம் வகுப்பும் படிக்கும் மாணவிகள் மூன்று கிலோ மீட்டர் தொலைவு சென்று படிக்க வேண்டியது உள்ளதாக கூறியுள்ளனர். தாங்கள் அவ்வாறு பள்ளிக்கு செல்லும் போது சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தவறாக நடக்கும் நபர்கள்
மேலும் பள்ளிக்கூடம் செல்லும்போது ஹெல்மட் அணிந்து வரும் நபர்கள் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் பள்ளிக்கூடம் செல்லவே பயமாக இருப்பதாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
8வது நாளாக பட்டினி
இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க தங்கள் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தை மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி இன்று 8வது நாளாக மாணவிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
போராட்டத்தை கைவிட முடியாது
போராட்டம் நடத்தும் மாணவிகளில் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். தங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
உடல் நலம் பாதிப்பு
உடல் நலம் பாதிக்கப்படும் மாணவிகளுக்கு போராட்டக்களத்திலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில மாணவிகள் மட்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
தரம் உயர்த்துவதில் சிக்கல்
இதனிடையே பள்ளியில் குறைந்த அளவு மாணவர்கள் சேர்க்கையே உள்ளதால் மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதில் சிக்கல் உள்ளதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் மாணவிகளின் இந்த போராட்டத்துக்கு கிராம மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.