காஷ்மீரில் 23 ஆண்டுகளில் 21,000 பயங்கரவாதிகள் பலி: மத்திய இணை அமைச்சர் தகவல்
டெல்லி: கடந்த 23 ஆண்டுகளில் காஷ்மீரில் இதுவரை 21 ஆயிரம் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் ஹரிபாய் பிரதீபாய் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவித் தாக்குதல் நடத்தி வருவது வழக்கமாகி விட்டது. ஆனால், அவ்வாறு ஊடுரும் பயங்கரவாதிகளை தாக்கி அழித்து இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் இது தொடர்பாக கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு ராஜ்யசபாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பிரதீபாய் சவுத்ரி பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் பயங்கரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. இதில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு டிசம்பர் காலம்வரையிலான காலங்களில், பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் இதுவரை 21 ஆயிரத்து 562 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இது போன்ற என்கவுன்டர்களில் 16 ஆயிரத்து 757 அப்பாவி மக்களும், 1425 போலீசார் பலியாகியுள்ளனர். பலியான அப்பாவி மக்கள், போலீசாரின் உறவினர்களுக்கு தேவையான நிவாரண நிதியை அரசு வழங்கி உள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.