உ.பி.யில் வரதட்சணைப் புகார் அளித்த மனைவி மீது ஆசிட் வீசிய கணவர்
மதுரா: உத்திரப்பிரதேசத்தில் வரதட்சணைப் புகார் அளித்த மனைவி மீது அவரது கணவர் மற்றும் உறவினர்கள் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் மதுரா நகரில் ராஜ்மார்க் பகுதியைச் சேர்ந்தவர் கபார். இவர் தனது மனைவியை வரதட்சணைக் கேட்டு கொடுமைப் படுத்தி வந்துள்ளார். எனவே, கபார் மீது அவரது மனைவி கோசிகலா பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த கபார், தனது சகோதரர்கள் தாஹிர் மற்றும் வாசீருடன் சென்று, போலீசில் புகார் அளித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த மனைவி மற்றும் அவரது சகோதரர் மீது ஆசிட் வீசியுள்ளார்.
இதனால் முகத்தில் படுகாயம் அடைந்த அப்பெண்ணையும், அவரது சகோதரரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆசிட்டை வீசி விட்டு தப்பி ஓடிய கபார் மற்றும் அவரது சகோதரர்கள் மீது போலீசில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இது தொடர்பாக கோசிகலா பகுதியின் காவல் நிலைய அதிகாரி சுரேந்திர குமார் சிங் கூறுகையில், ‘வரதட்சணை தொடர்பாக இரு குடும்பங்களுக்கு இடையே விவகாரம் நீடித்து வந்துள்ளது. வரதட்சணை கேட்டு தன்னை அவமானப்படுத்தியதை அடுத்து அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த கணவர், அப்பெண் மீது ஆசிட் தாக்குதலை நடத்தியுள்ளார்' என்றார்.
தலைமறைவாக உள்ள கபாரையும் அவரது சகோதரர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.