பெண் குழந்தைகளுக்கு ”கல்வி” என்னும் நம்பிக்கை அளிக்கும் ராஜஸ்தான் ஆண்கள்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பள்ளிக்கு செல்லாமல் அல்லது பாதியில் படிப்பை கைவிட்ட பெண் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து அவர்களின் கல்விக்காக ஆண்கள் குரல் கொடுக்கும் நிகழ்வு பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.
அம்மாநிலத்தில் பெண் கல்வியை வலியுறுத்தும் தொண்டு நிறுவனம் ஒன்றில் தன்னார்வ தொண்டர்களாக பணியாற்றுபவர்களில் 4500 பேர் இளைஞர்கள் ஆவர்.
கிராமங்களுக்கு சென்று பள்ளி செல்லா பெண் குழந்தைகளை கண்டறிவதற்காக இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
பெண்குழந்தைகளுக்கு உதவி:
இந்த அமைப்பு இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து கல்வி கற்க உதவி செய்துள்ளது. இந்த சமூக பணிக்காக 1.25 மில்லியன் டாலரை பரிசாக இந்த அமைப்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
5 ஆம் வகுப்பை தாண்டுவதில்லை:
பெண் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாநிலமான ராஜஸ்தானில் 40 சதவீதம் பெண் குழந்தைகள் 5 ஆம் வகுப்பை தாண்டுவதற்கு முன்பாகவே பள்ளியில் இருந்து நிறுத்தப்படுகிறார்கள்.
பொருளாதார தன்னிறைவு:
பெரும்பாலும் அவர்களின் பெற்றோர்களாலேயே வீட்டு வேலை செய்வதற்கும் கால்நடைகளை பார்த்துக்கொள்வதற்காகவும் இவ்வாறு செய்யப்படுகிறார்கள்.
குழந்தைத் திருமணம் தவிர்ப்பு:
ஆனால் பெண்கள் கல்வி கற்பதன் மூலம் அவர்கள் பொருளாதார தன்னிறைவு பெறுகிறார்கள். மேலும் குழந்தை திருமணங்கள் தவிர்க்கப்படுவதுடன் சரியான வயதில் திருமணம் செய்து கொள்வதால் ஆரோக்கியமான குழந்தைகளும் பிறக்கும்.
நம்பிக்கை விதைக்கும் ஆண்கள்:
இது பற்றி அந்த அமைப்பின் தலைவர் சபீனா ஹுசைன் கூறுகையில் "பெண் கல்விக்கு தடையாக இருக்கும் ஆண் சமூகத்தையே பெண் கல்விக்கான பணிகளில் ஈடுபடுத்துவதை முக்கியமானதாக கருதுகிறேன். மேலும் நான் சந்தித்த எந்த பெண்ணும் பள்ளிக்கு வர மறுக்கவில்லை என்பது நம்பிக்கை தரும் விஷயமாகும்" என தெரிவித்துள்ளார்.