பள்ளி மாணவி சாவில் அரசியல் ஆதாயம் தேடிய கட்சிகள் முகத்தில் கரி பூசிய சிஐடி அறிக்கை!
கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா (பழைய பெயர் ஷிமோகா) மாவட்டம் தீர்த்தஹள்ளி நகரை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த அக்டோபர் மாதம், மர்மமான முறையில் இறந்தார். சிறுமியின் தந்தை இதுகுறித்து போலீசில் அளித்த புகாரில், தனது மகளை சில மாற்றுமதத்து வாலிபர்கள் கடத்தி சென்றதாகவும், அவர்கள் பலாத்காரம் செய்து விஷத்தை வாயில் ஊற்றி தனது மகளை கொலை செய்ததாகவும் தெரிவித்தார்.
இந்த புகார் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமியின் தந்தைக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாக கூறி தீர்த்தஹள்ளியில் பாஜக நடத்திய பந்த் காரணமாக, ஐந்து நாட்கள் அந்த நகரமே ஸ்தம்பித்தது. மத மோதல் உருவாகும் சூழ்நிலை உருவாகியது.
ஆனால் இதற்கு நடுவே சிறுமியின் உடல் அடக்கத்தின்போது எந்த ஒரு கட்சியினரும் சென்று அஞ்சலி கூட செலுத்தவில்லை. அதற்கும் நேரமின்றி இப்பிரச்சினையை அரசியலாக்கவே முயன்று கொண்டிருந்தனர். பிரச்சினையை தீர்ப்பதற்காக சிஐடி போலீஸ் விசாரணைக்கு வழக்கை மாற்றியது கர்நாடக காங்கிரஸ் அரசு.
ஷிவமொக்கா தொகுதி எம்.பியும் பாஜக தேசிய துணை தலைவருமான எடியூரப்பா, கூறுகையில், மாநில அரசின் ஆட்சியின்கீழ் செயல்படும் சிஐடி போலீசாரை நாங்கள் நம்ப தயாராக இல்லை. எனவே இந்த விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டார். இதற்கு பதிலடி கொடுத்த அதே மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட கல்வித்துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர், பாஜக அரசியல் ஆதாயம் தேட இப்பிரச்சினையை கிளப்புவதாக கூறினார்.
ரத்னாகர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மகளிரணியினர் பெங்களூருவில் முதல்வர் சித்தராமையா வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது பெண் எம்.பி.யான ஷோபா கரந்தலாஜே போலீசாரின் தாக்குதலுக்கு உள்ளானார்.
பாஜக தலைவர்களில் ஒருவரும், முன்னாள் துணை முதல்வருமான ஈஸ்வரப்பா ஒருபடி மேலேபோய், முதல்வர் அல்லது உள்துறை அமைச்சர் மகளுக்கு இதுபோல நடந்திருந்தால் சும்மா இருப்பார்களா என்று கேள்வி எழுப்பினார். இந்த பேச்சு கடும் கண்டனங்களுக்கு உள்ளானது. ஆனால் சிஐடி போலீசார் அரசிடம் அளித்த விசாரணை அறிக்கையில், சிறுமி பலாத்காரம் செய்யப்படவில்லை, கொலை செய்யப்படவில்லை, மதிப்பெண் குறைவாக எடுத்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. மருத்துவ ஆவணங்களும் அறிக்கையோடு இணைக்கப்பட்டுள்ளது. இப்போது அனைத்து கட்சியினரும் முகத்தை எங்கு வைப்பது என தெரியாமல் முழித்துக் கொண்டுள்ளனர்.