மும்பை தாக்குதல் பயங்கரவாதி கசாப்பை கெளவுரவிக்கவே இந்தியா-பாகிஸ்தான் தொடர்: கொந்தளிக்கும் சிவசேனா
மும்பை: மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப்பைவும் அவனது குழுவினரையும் கெளவுரவிக்க இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தானியர்களை இந்தியாவில் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி பிசிசிஐ அலுவலகத்தை அண்மையில் முற்றுகையிட்டு சிவசேனையினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடக்குமா? நடக்காதா? என நீண்ட இழுபறி நீடித்து வந்த நிலையில், தொடரை பொதுவான இடமான இலங்கையில் நடத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 15 ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடரை நடத்த பி.சி.சி.ஐ. ஆர்வம் காட்டி வருகிறது. ஏற்கனவே இந்தியாவுடனான கிரிக்கெட் போட்டியை பொதுவான இடத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அந்நாட்டு பிரதமர் நவாஷ் ஷெரிப் ஏற்கனவே கிரீன் சிக்னல் காட்டிவிட்டார்.
இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான சாம்னாவில் எழுதியுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒட்டுமொத்த நாடும் மும்பை தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கும் போது, இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதற்கான மைதானத்தை பி.சி.சி.ஐ. அறிவித்தது மிகுந்த வருத்தமளிப்பதாக உள்ளது.
தீவிரவாத அச்சுறுத்தலால் பாகிஸ்தானில் இந்த தொடரை நடத்த முடியாது. அதேபோல, சிவசேனா போன்ற தேசபக்தர்கள் பாகிஸ்தானை இந்தியாவில் விளையாட அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், கிரிக்கெட் வாரியத்தில் உள்ள நிர்வாகிகள், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது பற்றியும், பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டது பற்றியும் எந்த கவலையும் இன்றி உள்ளனர். மேலும், இந்த தொடருக்கு வெளியுறவுத்துறை இன்னும் அனுமதி அளிக்காதது நல்ல அம்சம். என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடைபெறும் பொதுவான இடமாக இலங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனுமதி கோரி வெளியுறவுத் துறைக்கு விண்ணப்பித்துள்ளோம். இருப்பினும் மத்திய அரசின் பதிலுக்காக பிசிசிஐ காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.