ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு இந்தியாவில் தடை... 'வேட்டை' சூடு பிடிக்கும்?
டெல்லி: இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதனுடன் தொடர்புடைய தீவிரவாதிகளை, ஆதரவாளர்களைத் தேடும் நடவடிக்கை தீவிரமாகும் எனத் தெரிகிறது.
ஈராக், சிரியாவில் பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இஸ்லாமிய தேசம் என்ற ஒரு நாட்டை பிரகடனப்படுத்தியுள்ளனர். பிற நாடுகளையும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் இலக்கு வைப்பதைத் தடுக்க அமெரிக்காவும் அதன் நேசநாட்டு படைகளும் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.
இதற்கு எதிர்ப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களின் தலையை வெட்டி எடுத்து வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். இந்த தீவிரவாதிகள் வசம் ஏற்கெனவே 39 இந்தியர்களும் பிணைக் கைதிகளாக இருக்கின்றனர். இவர்கள் குறித்த எந்த ஒரு தகவலும் இதுவரை இல்லாத நிலையே நீடிக்கிறது.
உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியா 3 வது இடம் என்ற போதும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் மொத்தமே 4 இந்தியர்கள்தான் சேர்ந்தனர். அவர்களில் ஒரு இளைஞர் நாடு திரும்பிவிட்டார்.
இந்நிலையில்தான் பெங்களூர் நகரில் இருந்து மேதி பிஸ்வாஸ் இயக்கிய ட்விட்டர் கணக்கு மூலமே ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக திடுக்கிடும் தகவலை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து மேதி பிஸ்வாஸ் கைது செய்யப்பட்டார்.
தற்போது மேதி பிஸ்வாஸின் கூட்டாளிகளையும் போலீசாரும் தேசிய புலனாய்வு அமைப்பினரும் கைது செய்துள்ளனர். மேலும் பலரும் தேடப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே நாடாளுமன்றத்தில் நேற்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசுகையில், இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுவிட்டது என்றார்.
தற்போது தடை செய்யப்பட்ட இயக்கமாக அது இடம்பெற்றிருப்பதால் ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கை தீவிரமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த தடையால் ஆத்திரமடைந்து தங்களது வசம் உள்ள 39 இந்தியர்கள் உயிருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் ஆபத்தை ஏற்படுத்திவிடுவார்களோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.