10 வயதில் வழிதவறி பாக். சென்ற இந்திய சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைக்க தீவிரம்..இந்திய தூதர் சந்திப்பு!
கராச்சி : இந்தியாவில் இருந்து வழி தவறி பாகிஸ்தான் சென்ற சிறுமி கீதாவின் பெற்றோரை தேடி ஒப்படைக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் கீதாவை பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் ராகவன் நேற்று சந்தித்து பேசினார்.
காது கேளாத, வாய் பேச முடியாத பெண் கீதா. 13 ஆண்டுகளுக்கு முன் அவளை பாகிஸ்தானின் பஞ்சாப் வனத் துறையினர் கண்டெடுத்து லாகூரில் உள்ள இதி அறக்கட்டளையிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த அமைப்பு சிறுமியை கராச்சி கிளைக்கு அனுப்பி பெற்றோரை கண்டுபிடிக்க முயற்சித்துள்ளது.
எழுதப் படிக்கத் தெரியாத அந்த சிறுமிக்கு அப்போது 10 வயது. அவளுக்கு கீதா என்று பெயர் சூட்டி வளர்த்து வந்துள்ளார் கராச்சி கிளையின் அமைப்பாளர் பில்குஸ் இதி. அவளது பெற்றோரை கண்டுபிடிக்கவும் முயற்சி எடுத்து வருகிறார்.
ஆனால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. கீதாவின் சோகக் கதையைக் கேட்ட மனித உரிமை ஆர்வலரும், பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சருமான அன்சார் பர்னே, 3 ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்தார்.
அப்போது கீதாவின் பெற்றோரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். பயனில்லை. இப்போது முகநுாலில் அவர் கீதாவுக்காக பிரசாரம் செய்து வருகிறார்.
அதே போல் கடந்த ஆண்டு, இந்திய துாதரக அதிகாரிகளும் கீதாவை சந்தித்து அவளை புகைப்படம் எடுத்துச் சென்றனர். இந்திய பத்திரிகையாளர் ஒருவரும் கீதாவை பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளார்.
ஆனால் இதுவரை கீதாவின் ரத்த சொந்தங்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கராச்சி சென்று கீதாவை சந்தித்து நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானில் உள்ள இந்திய துாதர் டி.சி.ஏ. ராகவனுக்கு, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவிட்டார்.
Indian High Commissioner in Pakistan Mr Raghavan and Mrs Raghavan met Geeta in Karachi today.
— Sushma Swaraj (@SushmaSwaraj) August 4, 2015
இதைத் தொடர்ந்து ராகவனும் கீதாவை சந்தித்து பேசியுள்ளார். இதை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி செய்துள்ளார்.