26/11 மும்பை தீவிரவாத தாக்குதல் 7ம் ஆண்டு நினைவு தினம்- பலியானவர்களுக்கு அஞ்சலி
மும்பை: நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை பலிகொண்ட 26/11 மும்பை தீவிரவாத தாக்குதலின் 7ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தீவிரவாத தாக்குதலில் பலியான அப்பாவிகளுக்கும், தீவிரவாதிகளுடன் போராடி உயிரிழந்த காவல்துறை அதிகாரிகளுக்கும் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, கடல்வழியாக ஊடுருவிய பயங்கரவாதிகள் மும்பையில், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் மற்றும் ஒபராய் ஓட்டல்கள், லியோபோல்ட் கபே என மக்கள் கூடிய பல இடங்களில் தாக்குதல் நடத்தினர்.
இந்த ரத்தவெறி தாக்குதல் சம்பவத்தில் 166 அப்பாவி மக்களும் போலீசாரும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் தவிர மற்ற அனைவரும் சுட்டு கொல்லப்பட்டனர். நீண்ட விசாரணைக்கு பின்பு அஜ்மல் கசாப்பும் தூக்கிலிடப்பட்டான்
நினைவு தினம் அனுசரிப்பு
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மகாராஷ்டிர அரசு மற்றும் மும்பை போலீசார் சார்பில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. மஹாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃப்ட்னாவிஸ் மற்றும் மும்பை மாநகர கூடுதல் காவல் ஆணையர் அசோக் கம்தே உள்ளிட்டோர், தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதி அஜ்மல் கசாப் கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தூக்கிலிடப்பட்டான்.
|
மணல் சிற்பம்
தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின் நினைவாகவும், இதில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், தீவிரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையுடன் போராடுவோம் என்று உணர்த்தும் வகையில் ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணற் சிற்பத்தை வடித்துள்ளார் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.
|
டுவிட்டரில் அஞ்சலி
மும்பை தாக்குதல் சம்பவத்தின் 7ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, சமூக வலைத்தளங்களில் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு நடவடிக்கை
பொதுமக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், முக்கிய சந்திப்புகள் ஆகியவற்றிலும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். மத்திய ரயில்வே தலைமை அலுவலகமான சி.எஸ்.டி., மேற்கு ரயில்வே தலைமை அலுவலகமான சர்ச்கேட், தாதர், குர்லா டெர்மினஸ், பாந்திரா டெர்மினஸ், மும்பை சென்ட்ரல், குர்லா, தானே, கல்யாண், அந்தேரி, மாகிம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
விமான நிலையங்கள்
நீண்டதூர ரயில்களில் பயணிக்க வரும் பயணிகளின் உடைமைகள் பலத்த சோதனை செய்த பின்னரே உள்ள அனுமதிக்கப்படுகின்றன. மும்பை சாந்தாகுருசில் உள்ள உள்நாட்டு விமான நிலையம், சகாரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
கோவில்களில் பாதுகாப்பு
மும்பையில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில், மகாலட்சுமி கோவில், மும்பாதேவி கோவில், ஹாஜி அலி தர்கா, பாந்திரா மலைமாதா உள்ளிட்ட வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பு போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மும்பையில் உள்ள முக்கிய சாலைகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
மறக்க முடியுமா?
மும்பை நகரையே ரத்தகளமாக்கிய அந்த மறக்க முடியாத தீவிரவாத தாக்குதல் சம்பவம் மும்பை மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும், தாங்கி கொள்ள முடியாத பெரும் துயரத்தை கொடுத்தது. இதில், பலியான மற்றும் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினர் நெஞ்சில் பதிந்த வடு இன்னமும் ஆறவில்லை. 2008ம் ஆண்டு நவம்பர் 26ம்தேதி நடந்த இதுபோன்ற இனியொரு துரதிருஷ்ட நாளை மும்பை நகர மக்கள் சந்திக்க கூடாது. அதற்கு அரசும், காவல் துறையும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதே மும்பை நகர மக்களின் விருப்பம் ஆகும்.