96 நாட்களுக்கு முன்னரே ஆப்கன் அதிபருக்கு ஹேப்பி பர்த்டே சொன்ன மோடி... டிவிட்டர் காமெடி
டெல்லி: ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானிக்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே தவறுதலாக டிவிட்டர் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடியை சமூகவலைதளமான டிவிட்டரில் சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் தொடர்ந்து வருகின்றனர். முக்கிய தலைவர்களின் பிறந்தநாள், மறைவு குறித்தான வாழ்த்து மற்றும் இரங்கல் செய்திகளை அதில் மோடி பதிவு செய்து வருகிறார்.
அது மட்டுமின்றி தனது பயண திட்டங்களையும் சில புகைப்படங்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த வெள்ளியன்று ஆப்கானிஸ்தான் நாட்டு அதிபர் அஷ்ரப் கானிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், ‘நீடித்த ஆயுளுடன், நிறைந்த ஆரோக்கியத்துடன் உங்களது ஆனந்த மயமான வாழ்க்கைப் பயணம் அமைய வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறேன்' என மோடி குறிப்பிட்டிருந்தார்.
Happy birthday @ashrafghani. Praying for your long life & exceptional health and a joyful journey ahead.
— Narendra Modi (@narendramodi) February 12, 2016
@narendramodi Greetings from Munich Mr. PM. Although, my Birthday is on 19th May, but I'd still like to thank you for your gracious words :)
— Ashraf Ghani (@ashrafghani) February 12, 2016
அப்போது ஜெர்மனியில் தங்கியிருந்த ஆப்கன் அதிபர் அஷ்ரப், மோடிக்கு நன்றி தெரிவித்து டிவிட்டர் வாயிலாகவே பதில் அனுப்பியிருந்தார். அதில், ‘தனது பிறந்தநாள் மே மாதம் 19ம் தேதி தான் என்றும், ஆனபோதும், அட்வான்ஸ் வாழ்த்துக்களுக்கு நன்றி 'என்றும் அஷ்ரப் தெரிவித்திருந்தார்.
மோடி, அஷ்ரப் என இருவருக்குமே டிவிட்டரில் அதிக பாலோயர்கள் இருப்பதால், இந்த விஷயம் உடனடியாக இணையத்தில் பரவியது.
பிரதமர் மோடியின் டிவிட்டர் பக்கத்தில் வெளியாகும் பல தகவல்கள் அவரது சமூக வலைத்தள தொடர்புகளை நிர்வகித்துவரும் ஹிரன் ஜோஷி என்பவரால் தான் பதிவிடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.