நிர்பயா பலாத்கார குற்றவாளி முகேஷ் சிங்குக்கு ரூ. 40,000 கொடுத்து பேட்டி வாங்கப்பட்டதா?
டெல்லி: நிர்பயா பலாயில் பலாத்கார குற்றவாளி முகேஷ் சிங்குக்கு ரூ. 40,000 பணம் கொடுத்து பேட்டி வாங்கப்பட்டதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்தியாவின் மகள் என்ற தலைப்பிலான டாக்குமெண்டரியைத் தயாரித்தவர்கள் இந்தப் பணத்தைக் கொடுத்ததாக நவபாரத் டைம்ஸ் என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் மகள் என்ற பெயரில் 2012ம் ஆண்டு டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்குள்ளக்கப்பட்டு பரிதாபமாக இறந்தவர் நிர்பயா எனப்படும் ஜோதி சி்ங். இவர் குறித்த ஒரு டாக்குமெண்டரியை இங்கிலாந்தைச் சேர்ந்த லெஸ்லி உத்வின் எடுத்துள்ளார். இதற்காக நிர்பயாவின் பெற்றோர், அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், வக்கீல்கள் என சகலரிடமும் அவர் பேட்டி எடுத்துள்ளார்.
அதேபோல டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்பயா பலாத்கார குற்றவாளி முகேஷ் சிங்கிடமும் அவர் பேட்டி எடுத்துள்ளார். இந்தப் பேட்டிக்காக முகேஷ் சிங்குக்கு ரூ. 40,000 பணம் தரப்பட்டதாக தற்போது பரபரப்பு கிளம்பியுள்ளது.
முகேஷ் சிங்கைப் பேட்டி எடுக்க ஆரம்பத்தில் பெரும் தடைகளை சந்தித்துள்ளார் உத்வின். பின்னர் அவருக்கு குல்லார் என்பவர் உதவியுள்ளார். பல்வேறு தடைகளைத் தாண்டி திஹார் சிறை நிர்வாகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி வாங்கியுள்ளார் உத்வின்.
ஆனால் பேட்டி கொடுக்க தனக்கு ரூ. 2 லட்சம் தர வேண்டும் என்று பேரம் பேசினாராம் முகேஷ் சிங். பேரத்திற்கு இறுதியில் அவர் ரூ. 40,000 பணத்திற்குப் பேட்டி கொடுக்க சம்மதித்தாரா். இதையடுத்து அந்தப் பணம் முகேஷ் சிங் தரப்புக்கு போய்ச் சேர்ந்த பிறகுதான் பேட்டி கொடுக்கவே சம்மதித்தாராம்.
இந்தப் பணத்தை முகேஷ் சிங் குடும்பத்திநரின் கணக்கில் சேர்த்துள்ளதாக நவபாரத் செய்தி கூறுகிறது.
இந்தப் புதிய தகவல் பெரும் சர்ச்சையை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.