நிலவுக்கு மனிதர்களை அப்புறம் அனுப்பலாம்.. ரோபோவை அனுப்புங்க மொதல்ல
நிலவிற்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன்னர் ரோபோவை அனுப்ப இந்திய நிறுவனம் ஒன்று முயன்று வருகிறது.
டெல்லி: அமெரிக்காவின் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து அசத்தினார். அந்தக் கனவு இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது இந்தியாவிற்கு..
நிலவில் மனிதர்களை அனுப்புவதற்கு முன்னர் ஆளில்லா விண்கலமான சந்திரயானை அனுப்பி அசத்தியது இந்தியா. இதனைத் தொடர்ந்து மனிதர்களை அனுப்புவது தொடர்பாக தீவிர முயற்சியிலும் இந்தியா ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், நிலவிற்கு ரோபோ ஒன்றை அனுப்ப இந்திய நிறுவனம் ஒன்று முயன்று வருகிறது. அந்த நிறுவனம் என்ன? எப்படி நிலவிற்கு ரோபோவை அனுப்ப உள்ளது என்பதை காண்போம்.
ரோபோ போட்டி
நிலவிற்கு ரோபோக்களை அனுப்புவது தொடர்பாகவும் அதனை ஊக்குவிக்கும் வகையிலும் கூகுள் லூனார் எக்ஸ்பிரைஸ் என்ற போட்டி நடத்தப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு நிலவிற்கு ரோபோக்களை அனுப்பி மகிழலாம்.
டீம் இண்டஸ்
இந்தப் போட்டியில் இந்தியாவில் இருந்து தனியார் நிறுவனம் ஒன்று கலந்து கொள்கிறது. டீம் இண்டஸ் என்ற தனியார் நிறுவனம் மட்டும்தான் இந்தியாவில் இருந்து இந்தப் போட்டிக்கு கலந்து கொள்ளும் ஒரே நிறுவனமாகும்.
நிலவில் ரோபோ
பெங்களூரை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், போட்டியில் வெல்ல வேண்டும் என்றால் ரோபோவை வெற்றிகரமாக நிலவில் இறக்க வேண்டும். அதுமட்டும் போதாது. குறைந்தபட்சம் 500 மீட்டர் நிலவில் பயணித்து ரோபோ ஆய்வு செய்ய வேண்டும். அப்புறம் படங்களை எடுத்து பூமிக்கு அனுப்ப வேண்டும்.
2 கோடி அமெரிக்க டாலர்
இதை எல்லாம் சரியாக செய்துவிட்டால் போட்டியில் இந்திய நிறுவனம் வெற்றி பெறலாம். வெற்றி பெற்றால் 2 கோடி இந்திய ரூபாய் இல்லிங்க. அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும்.
ரோபோ தயார்
டீம் இண்டஸ் நிறுவனத்தின் ரோபோ இந்த ஆண்டு டிசம்பரில் நிலவிற்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறது. பரிசு கிடைக்குதோ இல்லையோ.. இந்தப் போட்டியில் கலந்து கொள்ள தயாராக இருக்கின்ற டீம் இண்டஸ் நிறுவனத்திற்கு வாழ்த்து சொல்வோம்.