சாரதா சிட்பண்ட் மோசடியில் சுருட்டிய பணம் தீவிரவாதிகள் வங்கி கணக்கில்?
டெல்லி: மேற்கு வங்கத்தில் நடந்த சாரதா நிதி நிறுவன மோசடியில் சுருட்டப்பட்ட பணம் தீவிரவாதிகள் உதவியோடு வங்கதேசத்திலுள்ள 'இஸ்லாமி பேங்க் பங்க்ளாதேஷ் லிமிட்டெட்' (IBBL) என்ற வங்கியில் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களை உலுக்கியது சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு. வாடிக்கையாளர்களிடமிருந்து பல ஆயிரம் கோடி பணத்தை சுருட்டிய சாரதா சிட்பண்ட்ஸ் நிறுவனத்துக்கும், மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜியின் திரினமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. அகமது ஹசன் இம்ரானுக்கு நடுவேயும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சுருட்டப்பட்ட பணம் வங்கதேசத்தில் செயல்படும் இஸ்லாமி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு அந்த பணம், சவுதி அரேபியா மற்றும் மெக்சிகோவிலுள்ள வங்கிகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, இஸ்லாமி வங்கியுடன் தொடர்புள்ள சவுதியின் சோசியல் இஸ்லாமி பேங்க் பண பரிமாற்ற தகவல்களையும் சேகரிக்க ஆரம்பித்துள்ளது உளவுத்துறை.
வங்கதேசத்திலுள்ள இஸ்லாமி வங்கி, ஏற்கனவே பல நாடுகளால் கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்கும் ஒரு வங்கியாகும். இப்போது இந்தியாவும் அந்த வங்கியின் மீது கண் வைத்துள்ளது.
சவுதியில் உள்ள அல் ரஜி வங்கியுடனும், இஸ்லாமி வங்கிக்கு தொடர்பு உள்ளதால் சவுதியில் எந்த வங்கிக்கு பணம் பரிமாறப்பட்டிருக்கும் என்பதில் இந்திய உளவுத்துறைக்கு சிறு குழப்பம் உள்ளது. வங்கதேச அரசிடம் இதுகுறித்த விவரங்களை இந்தியா கேட்டுள்ள நிலையில், அந்த தகவல்கள் கிடைத்தால் வழக்கின் விசாரணைக்கு மிகுந்த உறுதுணையாக இருக்கும்.
இஸ்லாமி வங்கி, அல் ரஜி, சோசியல் இஸ்லாமி பேங்க் போன்ற வங்கிகள் லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு பணத்தை பட்டுவாடா செய்வதில் முக்கிய பங்காற்றுவதாக தெரிகிறது. எனவே தீவிரவாதிகளின் செல்லப்பிள்ளையாக இந்த வங்கிகள் இயங்கி வருகின்றன. பணத்தை பாதுகாப்பாக இந்த வங்கிகளில் போட்டு வைத்துவிட்டு நாச வேலைகளில் ஈடுபடும்போது அவற்றை பெறுவது தீவிரவாதிகள் வழக்கமாக உள்ளது.
எனவே வங்கதேசத்தில் இருந்து கிடைக்கும் தகவல்களை கொண்டு சாரதா சிட்பண்ட் மோசடியின் மதிப்பை அறிந்து கொள்வதுடன், பத்வான் குண்டுவெடிப்பிற்கு இந்த வங்கியில் இருந்து அளிக்கப்பட்ட பணம் எவ்வளவு என்பதையும் அறிந்து கொள்ள முடியும் என்கின்றனர் இந்திய உளவுப் பிரிவினர்.