மாயமான ஏ.என் 32 விமானத்தை தேடுவதற்கு அமெரிக்காவின் உதவியை நாடுகிறது இந்தியா
டெல்லி: மாயமான ஏ.என்.32 விமானம் காணாமல் போன நேரத்தில் பதிவான செயற்கைகோள் புகைப்படம் தேவைப்படுவதால், அமெரிக்காவின் உதவியை நாடியிருப்பதாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.
தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 22-ஆம் தேதி, அந்தமான் போர்ட் பிளையருக்கு புறப்பட்டுச் சென்ற ஏ.என்.32 வகை விமானம் மாயமானது. கடல் மட்டத்தின் மேல்பகுதியில் தேடியதில், விமானம் விழுந்த இடத்தையோ அல்லது அதன் பாகங்களோ கிடைக்கவில்லை.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை முதல் கடலுக்கு அடியில் விமானத்தைத் தேடும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், இந்தப் பணியில் இரு நாள்களாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் விமானம் தேடும் பணியில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவே கருதப்படுகிறது. மேலும் கடலில் கிடைத்த பொருள்களை வைத்து ஆய்வு செய்து பார்த்தலில் மாயமான விமானத்திற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டது.
இந்நிலையில் மாயமான விமானத்தை தேடும் பணி தொடர்பாக அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், விமானம் மாயமானதாக கருதப்படும் பகுதியில் 3,300 அடி முதல் 4,000 அடிவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. சுமார் 10 கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
மாயமான விமானத்தை தேடி கண்டுபிடிக்க தேவையான அனைத்து வளங்களையும் பயன்படுத்தி வருகிறோம். அமெரிக்கா செயற்கை இடைக்கண் ரேடார்கள் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள்களின் பரந்த பார்வை வசதியை பெற்றிருப்பதால், அந்த நாட்டின் உதவியை மத்திய அரசு நாடி உள்ளது. விமானம் மாயமான போது அடர்ந்த மேகக்கூட்டங்கள் இருந்த சூழ்நிலையில் கூட அமெரிக்க செயற்கைக்கோள்களால் சிக்னல்களை எடுத்துக் கொள்ள முடியும்.
விமானம், திடீரென மாயமானது பற்றி நான் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளிடம் பேசினேன். அவர்களும் குழப்பம் அடைந்துள்ளனர். விமானம் ரேடாரில் மறைந்து போவதற்கு முன்பாக சாய்ந்து, 23 ஆயிரம் அடியில் இருந்து மிக வேகமாக கீழே இறங்கியிருக்கிறது. அந்த விமானத்தில் இருந்து ஆபத்து குறித்த கடைசி தகவல் உள்ளிட்ட எந்த தகவலும் பெறப்படவில்லை.
விமானம் மாயமான நேரத்தில் எடுக்கப்பட்ட செயற்கைகோள் புகைப்படம், பதிவான சிக்னல்கள் தேவைப்படுகிறது. செயற்கைகோளின் புகைப்படத்தை அமெரிக்காவிடம் கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.