குடிநீர் தட்டுப்பாடு- மாலத்தீவுக்கு விமானப் படை விமானம் மூலம் குடிநீரை அனுப்பியது இந்தியா!
டெல்லி/ மாலே: மாலத்தீவு தலைநகர் மாலேவில் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டதால் நேற்று இரவு முதல் அங்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்நாடு விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்திய விமானப் படை விமானம் குடிநீருடன் மாலே நகரை சென்றடைந்தது.
மாலத்தீவு நாட்டில் கடல்நீர் மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் குடிப்பதற்கான நீர் கிடைப்பது பெரும்பாடாகிவிட்டது. இந்த நிலையில் தலைநகர் மாலேவில் உள்ள மாலத்தீவு குடிநீர் மற்றும் கழிவுநீர் நிறுவனத்துக்கு சொந்தமான குடிநீர் சுத்தகரிப்பு மற்றும் விநியோக நிலையத்தில் நேற்று இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு குடிநீர் விநியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது.
இதனால் மாலே நகரில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. சில இடங்களில் காவல்துறை உதவியுடன் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்த இடங்களில் நீண்ட வரிசைகளில் விடிய விடிய குடிநீருக்காக காத்திருந்து தவித்துப் போயினர் மாலே நகரவாசிகள்.
Indian assistance arrives in Maldives. First IL-76 with drinking water from India lands in Male. pic.twitter.com/qZ6Uilk59U
— Syed Akbaruddin (@MEAIndia) December 5, 2014
இதனிடையே நேற்று இரவு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சர் துன்யா மமூன், உடனடியாக குடிநீர் விநியோகத்துக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் கேரளாவின் திருவனந்தபுரம் விமானப் படை தளத்தில் இருந்து விமானம் மூலம் மாலே நகருக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டது. இதனை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பரூதின் ட்விட்டரில் உறுதி செய்திருக்கிறார். மேலும் சில விமானப் படை விமானங்களும் குடிநீருடன் மாலத்தீவுக்கு செல்ல இருக்கிறது.