இந்தியா டுடேவின் தமிழ், தெலுங்கு, மலையாளம் பதிப்பு நிறுத்தப்படுகிறது!
டெல்லி: இந்தியாவின் பிரபலமான இந்தியா டுடே இதழின் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் பதிப்புகள் நிறுத்தப்படுகின்றன. இந்த வாரம் வெளியாகும் இதழே இவற்றின் கடைசிப் பதிப்பாகும் என்று இந்தியா டுடே ஆசிரியர் அருண் பூரி அறிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றின் பிரிண்ட் பதிப்புகளையே இந்தியா டுடே நிறுத்துகிறதாம்.
இதுகுறித்து அருண் பூரி தனது ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தொடர்ந்து இந்த பதிப்புகளால் நஷ்டம் தொடர்வதால் அதைத் தாக்குப் பிடிக்க முடியாமல்தான் நிறுத்துவதாக கூறியுள்ளார்.
அதேசமயம், இந்தி பிரிண்ட் பதிப்பு தொடர்ந்து வருமாம்.
பூரியின் கடிதத்திலிருந்து....
இந்தியா டுடே வாராந்திர இதழின் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றின் பிரிண்ட் பதிப்புகள் கடந்த 20 வருடமாகவே நஷ்டத்தையே கொடுத்து வருகின்றன. எதிர்காலத்தில் நிலைமை மாறலாம் என்ற எதிர்பார்ப்பில் நஷ்டத்தைப் பொறுத்து வந்தோம். ஆனால் இவற்றுக்கு எதிர்காலம் இல்லை என்பதை உறுதி செய்து, இவற்றின் பிரிண்ட் பதிப்புகளை நிறுத்த முடிவு செய்துள்ளோம். கனத்த இதயத்துடன் இதை அறிவிக்கிறோம்.
இந்த இதழ்களில் தற்போது பணியாற்றும் ஒவ்வொரு ஊழியருக்கும் சரியான முறையில் இழப்பீடு தரப்படும். சென்னையில் உள்ள அலுவலகத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்படும். ஆங்கிலப் பதிப்புக்கு செய்திகள் அளித்து வரும் ஊழியர்கள் ஆங்கில பதிப்புக்கு மாற்றப்படுவர்.
இந்த வாரமே இந்தியா டுடே இதழின் தென்னகப் பதிப்புக்கு கடைசி வாரமாகும் என்று கூறியுள்ளார் பூரி.