வான்வழிப் பாதுகாப்பில் புதிய அத்தியாயம்... இந்திய ராணுவத்தில் இணைந்தது ஆகாஷ் ஏவுகணை!
டெல்லி: இந்திய ராணுவத்திற்கு மே 5ம் தேதி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தினமாகும். முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட, தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடிய ஆகாஷ் ஏவுகணை இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டது.
ஆகாஷ் ஏவுகணையை இந்திய ராணுவத்தில் இணைக்கும் நிகழ்ச்சி டெல்லி மானேக்ஷா மையத்தில் நடந்தது. இந்திய ராணுவத்திற்கு மிகவும் பலம் சேர்ப்பதாக ஆகாஷ் அமைந்துள்ளது.
ராணுவத்திற்கான ஆகாஷ் ஏவுகணையை, பாரத் டைனமிக்ஸ் லிமிட்டெட் நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஏற்கனவே ஆகாஷ் ஏவுகணை இந்திய விவிமானப்படையில் சேர்க்கப்பட்டு விட்டது. அதை பெல் எனப்படும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட் நிறுவனம் உருவாக்கியது.
இந்திய ராணுவம் 2 ஆகாஷ் ஏவுகணைகளுக்கு ஆர்டர் கொடுத்திருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ. 19,000 கோடியாகும். முதல் பிரிவு ஆகாஷ் ஏவுகணையை பஞ்சாப் மாநிலத்தில் நிறுத்தி வைக்கவுள்ளது ராணுவம்.
ஆகாஷ் ஏவுகணையை, ராணுவத்தின் விமான பாதுகாப்புப் பிரிவுக்கு அர்ப்பணித்து வைத்தார் இந்திய ராணுவ தலைமைத் தளபதி தல்பீர் சிங். டிஆர்டிஓதான் ஆகாஷ் ஏவுகணையை வடிவமைத்து உருவாக்கியதாகும்.
நிகழ்ச்சியின்போது டிஆர்டிஓ மற்றும் பாரத் டைனமிக்ஸ் நிறுவனங்களை ராணுவ தளபதி தல்பீர் சிங் பாராட்டினார்.
அவர் கூறுகையில், ‘பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், ஆகாஷ் ஏவுகணை ராணுவத்தில் இணைந்திருப்பது மிகவும் பொருத்தமானதாகும்' என்றார்.
இது தொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘இந்திய ரணுவத்தின் வான்வழிப் பாதுகாப்பில் புதிய அத்தியாயமாக இது மலர்ந்துள்ளது. எதிரிகளின் சவால்களை சீரிய முறையில் சந்திக்க இது வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும் இந்திய ராணுவம் வான் மார்க்கமாக வரும் சவால்களையும் எளிதில் சந்திக்கும் பலம் கிடைத்துள்ளது' என்றார்.
சமீபத்தில் ஒன்இந்தியாவுக்கு பேட்டி அளித்த பிஇஎல் மிஸ்ஸைல் சிஸ்டம்ஸ் பொது மேலாளர் நடராஜ் கிருஷ்ணப்பா கூறுகையில், ‘இந்திய விமானப்படைக்கு ரூ. 1200 கோடி அளவிலான ஆகாஷ் ஆர்டர் வந்தது' என்று கூறியிருந்தார்.
விமானப்படைக்கான 2 ஆகாஷ் ஏவுகணைகள் கடந்த 2008ம் ஆண்டு ஆர்டர் வைக்கப்பட்டது. பின்னர் அது சப்ளை செய்யப்பட்டு நிறுவப் பட்டும் விட்டது.
கடந்த 2010ம் ஆண்டு மேலும் 6 ஆகாஷ் ஏவுகணைகளுக்கு விமானப்படை ரூ. 3500 கோடிக்கு ஆர்டர் கொடுத்திருந்தது. இந்த வருடத்திற்குள் இந்த ஆர்டரும் நிறைவேற்றப்படும்.
ஆகாஷ் ஏவுகணை - புள்ளி விவரம்
- இந்தியாவிலேயே முற்றிலும் உருவாக்கப்பட்ட சூப்பர்சானிக் குறுகிய தூர தரையிலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணை இது.
- விமானம், ஹெலிகாப்டர், ஆளில்லாத விமானங்களைத் தாக்கித் தகர்க்கக் கூடியது.
- தரையிலிருந்து 25 கிலோமீட்டர் உயரத்திலான இலக்குகளை இது துல்லியமாக தாக்கும்.
- ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்க முடியும்.
- டிஆர்டிஓ இதை வடிவமைத்துள்ளது.
- பிஇஎல், இசிஐஎல், எச்ஏஎல், டாடா பவர் எஸ்டி, எல் அன்டி ஆகியவையும் இந்தத் திட்டத்தில் பங்காற்றியுள்ளன.
- மொத்தம் 61 அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் பங்கெடுத்துள்ளன.