பாகிஸ்தானின் முப்படைகள் கண்ணிலும் மண்ணை தூவி, இறங்கி அடித்த இந்திய ராணுவம் #indianarmy
டெல்லி: பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தின் விமானப்படை நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள் பல அழிக்கப்பட்டன. இரு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். யூரி தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடி இதுவாகும்.
யூரி தாக்குதல் நடைபெற்ற பிறகு, கடந்த 10 நாட்களாக, பாகிஸ்தானின் முப்படைகளும், உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்திய அரசு கண்டிப்பாக பதிலடி தாக்குதல் தொடுக்கும் என்ற அச்சம் பாகிஸ்தான் ராணுவத்திற்கு இருந்தது.
இன்னும் சொல்லப்போனால், இஸ்லாமாபாத் நகர் மீது போர் விமானங்களை பறக்கச் செய்து பாகிஸ்தான் மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டியது பாகிஸ்தான் அரசு. இந்திய ராணுவத்தால் நம் மீது தாக்குதல் நடத்த முடியாது, நமது ராணுவம் பலமானது என்று பாகிஸ்தான் மக்களுக்கு காண்பிப்பதற்காக போர் விமானங்களை பறக்கவிட்டது பாகிஸ்தான்.
மேலும், காஷ்மீர், ராஜஸ்தான் மாநில பாகிஸ்தான் எல்லையில் கூடுதல் ராணுவத்தினரை குவித்து, இந்தியா பதிலடி அளிக்காமல் தடுக்க ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள பாகிஸ்தானின் முப்படைகளும் தயார் நிலையில் இருந்தன. பாகிஸ்தானின் ரேடார்கள் இந்திய எல்லையில் இருந்து விமானங்கள் நுழைகிறதா என்பதை கண்காணித்தபடி இருந்தன.
இத்தனை முன்னேற்பாடுகளுக்கு நடுவேயும், இந்திய ராணுவம் விமானம் மூலமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைக்குள் பாரசூட் மூலம் குதித்து, தங்களது இலக்கான தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதலை நடத்திவிட்டு, வெற்றிகரமாக எந்த பாதிப்பும் இன்றி தாய் நாட்டுக்கு திரும்பி வந்துள்ளது.
இந்த தாக்குதலில் விமானப்படையுடன், சிறப்பு அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இலக்கை சரியாக தாக்கி அழித்துவிட்டு, எந்த வித இழப்புமின்றி வீர நடை போட்டு திரும்பி வந்துள்ளனர் இந்திய ராணுவ வீரர்கள். அதாவது, பாகிஸ்தானின் முப்படைகள் கண்களிலும் மண் தூவப்பட்டுள்ளது.
பொக்ரானில் யாருக்கும் தெரியாமல் அணு குண்டை சோதித்து பார்த்து அமெரிக்காவையே ஆட்டம் காண வைத்த, இந்தியாவுக்கு, இந்த தாக்குதல் ஒன்றும் பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால் பாகிஸ்தானோ இப்போது அலற ஆரம்பித்துள்ளது.
இதுகுறித்து ஓய்வு பெற்ற இந்திய ராணுவ ஜெனரல் ஜி.டி.பக்ஷி கூறுகையில், மியான்மரில் புகுந்து இந்திய ராணுவம் தீவிரவாதிகளை அழித்ததை போல பாகிஸ்தானில் தாக்குதலை நடத்த முடியாது என்று பலரும் கருத்து கூறிவந்தனர். ஆனால், இந்திய ராணுவத்தின் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் எந்த இலக்கையும் தாக்கி அழிக்க வல்லவர்கள். இன்று இந்திய ராணுவம் தனது தீரத்தை உலகத்திற்கு மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது என்றார்.