போட்டுத்தள்ளிட்டோம்.. போய் பாருங்க.. பாகிஸ்தானுக்கு போன் போட்டு சொன்ன இந்தியா! #SurgicalStrike
டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தின் விமானப்படை நேற்று இரவு அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள் பல அழிக்கப்பட்டன. இரு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். யூரி தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடி இதுவாகும்.
இந்த தாக்குதலை பாகிஸ்தான் யூகிக்க முடியவில்லை. முப்படைகளின் கண்களிலும் மண்ணை தூவிவிட்டு இந்திய ராணுவம் இந்த தாக்குதலை வெற்றிகரமாக முடித்தது. சிறப்பு படையினரும் இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அனைத்து மாநில முதல்வர்களையும் போனில் அழைத்து தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு முன்பாகவே, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான உயர் அதிகாரிக்கு, இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான உயர் அதிகாரி ரன்பீர் சிங் போன் மூலம், இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
"பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள தீவிரவாத முகாம்களை நாங்கள் அழித்துள்ளோம். அதில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். நீங்களும் தீவிரவாதிகளை ஒழிக்க எங்களுக்கு ஆதரவு வழங்குங்கள்" என்று ரன்பீர் சிங், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிக்கு போனில் தெரிவித்துள்ளார்.
அதாவது, நாங்கள் போட்டுத்தள்ளிவிட்டோம், நீங்கள் பிணங்களை எடுத்துச் செல்லுங்கள் என்பதை நாகரீகமாக கூறியுள்ளார் ரன்பீர் சிங். இதன்மூலம், இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்திவிட்டதாக உலக நாடுகள் பழி சொல்வதிலிருந்தும் தப்பிக்க இந்த நடவடிக்கையை இந்த ராணுவம் எடுத்துள்ளது. அதாவது, பாகிஸ்தானின் உதவியை கோரியபடியேதான், நாங்கள் தீவிரவாதிகளை அழித்தோம் என இந்தியா வாதிட இந்த போன் அழைப்பு ஒரு ஆதாரமாக இருக்கும் என்கிறார்கள் பாதுகாப்பு ஆலோசகர்கள்.