பாக்.,பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டாம் - தூதரக அதிகாரிகளுக்கு இந்தியா அறிவுறுத்தல்
டெல்லி: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தங்களுடைய குழந்தைகளை பாகிஸ்தானில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பவேண்டாம், இந்தியா திருப்பி அனுப்புங்கள் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் சமீப காலமாக தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பர்ஹான் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உயிரிழப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கண்டனம் தெரிவித்ததோடு, "காஷ்மீர் நிச்சயமாக பாகிஸ்தானுடன் என்றாவது இணையும்' என்று கூறியிருந்தார்.
மேலும், பர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, பாகிஸ்தானில் கருப்புத் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதனால், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே வார்த்தை மோதல்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தங்களுடைய குழந்தைகளை பாகிஸ்தானில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம், இந்தியா திருப்பி அனுப்புங்கள் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது
இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், டெல்லியில், திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூதரகங்கள் அமைந்துள்ள நாடுகளில் நிலவும் சூழல் தொடர்பாகவும், தூதரகக் கொள்கைகள், ஊழியர்கள் நியமனம் ஆகியவற்றை ஆய்வு செய்வது வழக்கமான நடைமுறையாகும்.
அதன்படி, நிகழும் கல்வியாண்டு முதல் இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் தங்களது குழந்தைகளை பாகிஸ்தானுக்கு வெளியே உள்ள பள்ளிகளில் சேர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.
இதன்படி இந்திய தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் குழந்தைகள் சுமார் 60 பேர் அங்குள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். பாகிஸ்தான் பள்ளிகளில் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு கவலைக் கொண்டு உள்ளது. இதற்கிடையே பாகிஸ்தானில் இந்தியா தனது பணியாளர்களையும் குறைத்துக் கொள்ளலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.