இந்தியரின் வேலை வாய்ப்பை பறித்த' சதாம் ஹுசைன்!
பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தூக்கு தண்டனை வழங்கப்பட்ட பின்னரும், இராக்கின் மறைந்த முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன், இந்தியர் ஒருவரின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார்.
25 ஆண்டுகளுக்கு முன்னால், இராக்கின் சர்வாதிகாரியாக இருந்த சதாம் ஹுசைனின் பெயரை தனக்கு சூட்டிய அவருடைய தாத்தாவை இந்தியாவை சோந்த இந்த கடல் பொறியியலாளர் குறைசொல்ல விரும்பவில்லை.
ஆனால், தன்னுடைய பெயர் ஹுசைன் என்று உச்சரிக்கப்படாமல், ஹுசேன் என்று சற்றே மாறுபட்டு ஒலித்தாலும், சுமார் 40 முறை ஒரு வேலை மறுக்கப்பட்ட பின்னர், பணி வழங்குவோர் தனக்கு வேலை வழங்க விரும்பவில்லை என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார்.
எனவே சதாம் ஹூசேன் என்ற தன்னுடைய பெயரை சாஜிட் என்று மாற்றி கொள்ள நீதிமன்ற படியேறினார். ஆனால், அந்த அதிகார வர்க்கத்தின் சக்கரங்கள் மிகவும் மெதுவாக சுற்றுவதைப் போலவே அவருடைய வேலை தேடும் படலமும் அமைந்துவிட்டது.
இதுபோன்றவற்றிற்கு இந்தியாவிலுள்ள பல கதவுகள் ஒருபோதும் திறக்காமல் போயிருக்கலாம். பல இடங்களில் புருவங்களை உயர்த்தச் செய்திருக்கிறது. பிற இடங்களில் அசட்டுச் சிரிப்பைத்தான் பதிலாக தந்துள்ளது.
ஆனால் சதாம் ஹுசேன் என்கிற பெயர் கவனிக்கப்படமால் போகப் போவதில்லை என்பதை மட்டும் இந்த வாழ்க்கை சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது.
பல்கலைக்கழக பட்டம்
தமிழ்நாடு நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் பட்டம் வென்ற இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஜார்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரை சேந்த சதாம் ஹூசேன் இந்த சிக்கலை உணர்ந்துள்ளார்.
இவர் கல்லூரியில் நன்றாகவே படித்தார். இவரது சக மாணவர்கள் ஏற்கெனவே வேலைகளை பெற்றுள்ள நிலையில், கப்பல் நிறுவனங்கள் இருக்கு வேலை வழங்க முன்வரவில்லை.
"எனக்கு வேலை கொடுக்க மக்கள் அச்சப்படுகின்றனர்" என்று சாஜித் என்று பெயர் மாற்றி கொண்ட சதாம் ஹூசேன் தெரிவித்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் மேற்கோள் காட்டியுள்ளது.
"சர்வதேச எல்லைகளில் குடிவரவு அதிகாரிகளிடம் இருந்து எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களை பார்த்து அவர்கள் பயப்படுகின்றனர்" என்று அவர் கூறுகிறார்.
கைகொடுக்காத புதிய பாஸ்போர்ட்
புதிய பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றுக் கொள்வதன் மூலம் தன்னைச் சுற்றியுள்ள இந்த தடைகளில் இருந்து எளிதாக வெளியேறி விடலாம் என்று சதாம் ஹூசேன் எண்ணினார்.
ஆனாலும், அவருடைய பணி விண்ணப்பங்கள் சுமூகமாக நடைபெறவில்லை. இந்த புதிய பெயரில் பள்ளிக்குச் சென்றதை அவரால் நிரூபிக்க முடியவில்லை என்பதே இதற்கு காரணமாகும். அதனை நிரூபிப்பது என்பது நீண்ட காலம் எடுக்கும் நடைமுறையாக உள்ளது.
அவருடைய பள்ளிச் சான்றிதழ்களில் பெயரை மாற்றி வழங்குவது தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு, மே மாதம் 5 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அதன் பிறகு அவருடைய பட்டப்படிப்பு சான்றிதழ் அனைத்தும் மாற்றப்படலாம்.
இதுபோன்ற நிலைமையில் சாஜித் மட்டும் தனியாக இல்லை. கொடூரமான சர்வாதிகாரிகளில் ஒருவர் என்ற முத்திரையை விட்டு சென்ற தலைவரான சதாம் ஹுசைனுக்கு, மரியாதை கொடுக்கும் வகையில் தொடக்கத்தில் இந்த பெயர் சூட்டப்பட்ட பலரை விட, அவர் அதிகமாகவே கவலையடையலாம்.
இராக்கில் சதாம் என்ற பெயருடன்
பாலைவன மாகாணமான அன்பரில் அமைந்துள்ள சுன்னி பிரிவினர் வாழும் நகரான ரமாடியில், பத்திரிகையாளராக சதாம் என்பவர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார்,
மறைந்த தலைவர் சதாம் ஹுசைனின் பாயத் கட்சியை சேர்ந்த உறுப்பினர் அல்ல என்று அவருடைய மேலதிகாரிகளிடம் எடுத்துக்கூறி சம்மதிக்க வைக்க முடியாத காரணத்தால், இந்த பத்திரிகையாளரின் தந்தை அரசுப் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தன்னுடைய மகனுக்கு சதாம் என்று பெயர் வைத்ததால் மட்டும், பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட அதிபர் மீது என்ன பெரிய விசுவாசத்தை காட்டிவிட முடியும் என்பது அவர்களின் வாதமாக உள்ளது.
பிறர் இன்னும் கொடூரமான அனுபவங்களை பெற்றுள்ளனர். ஒருவர், தான் ஷியா ஆயுதப்படையினரால் பிடிக்கப்பட்டதாகவும், மண்டியிட வைத்து, ஒரு துப்பாக்கியின் பின்பக்கத்தை கழுத்தில் வைத்து அழுத்தி சித்ரவதை செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அவருடைய அதிர்ஷ்டம். அந்த துப்பாக்கி செயல்படாமல் போய்விட்டது. பின்னர், அந்த ஆயுதப்படை அவரை விடுவித்துவிட்டது.
என்னுடைய ஒரு நண்பர், அவருக்கு தெரிந்த பாக்தாத்திலுள்ள குர்து இன பள்ளி குழந்தையின் சக மாணவர் ஒருவருக்கு சதாம் ஹூசைன் என்று பெயரிடப்பட்டுள்ளதை அறிய வந்துள்ளார்.
அந்த பையன் கால்பந்து விளையாடுகிறபோது, அவனை பார்த்து, "உன்னை அமெரிக்கா மட்டும் வெறுக்கவில்லை. இந்த நாடு முழுவதும் வெறுக்கிறது" என சக மாணவர்கள் அடிக்கடி கத்துவார்களாம்.