இந்தோனேசியாவில் இந்தியருக்கு தூக்கு நிறைவேற்றப்படவில்லை... சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம்
டெல்லி: இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய இந்தியருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்தியர் குர்தீப் சிங் உள்பட 14 பேருக்கு இந்தோனேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குர்தீப் சிங்குடன் சேர்த்து அத்தனை பேருக்கும் ஒரே நேரத்தில் தண்டனையை நிறைவேற்ற அந்த நாட்டு அரசு முடிவு எடுத்திருந்தது.
இவர்களில் இந்தோனேசிய பெண் ஒருவரும் அடங்குவார். ஆனால் ஒரே நேரத்தில் 14 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனிடையே 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவருக்கும், நைஜீரியாவை சேர்ந்த 3 பேருக்கு தூக்கு தண்டனை நேற்று நிறைவேற்றப்பட்டது.
அதே நேரத்தில் எஞ்சிய 10 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியது. இந்த விவகாரம் குறித்து இந்தோனேசிய அதிகாரிகளுடன் சுஷ்மா ஸ்வராஜ் ஆலோசனை நடத்தியதால் இந்தியருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
இதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி செய்துள்ளார். "இந்தோனேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்தியருக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை" என சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.