ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்து போரில் உயிரிழந்ததாக கூறப்பட்ட ஆரிப் மஜீத் 'உயிரோடு' நாடு திரும்பினார்!
மும்பை: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து போரில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட மகாராஷ்டிரா இளைஞர் ஆரிப் மஜித் உயிரோடு நாடு திரும்பியுள்ளார். அவரிடம் தற்போது தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்த ஆரிப் மஜீத், ஷாகீன் தன்கி, பகத் ஷேக் மற்றும் அமான் ஆகிய 4 இளைஞர்கள் கடந்த மே மாதம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள புனித தலங்களை தரிசிக்க சென்றனர். பின்னர், அவர்கள் இந்தியா திரும்பவில்லை.
இந்நிலையில் காணாமல் போன 4 பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. இதை உறுதிபடுத்தும் வகையில் கடந்த ஆகஸ்டு 26-ந் தேதி மாயமானவர்களில் ஒருவரான ஆரிப் மஜீத் வெடிகுண்டு தாக்குதலில் பலியானதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் ஆரிப் மஜீத் உயிரோடு இன்று காலை நாடு திரும்பியுள்ளார். அவரிடம் தேசியப் புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தேசியப் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்த தகவல்கள்:
- துருக்கியில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்திருந்தவர் ஆரிப் மஜீத். அங்கிருந்து தப்பிக்க முயற்சித்த போது மீட்கப்பட்டவர்.
- இடைவிடாது குண்டுமழைகளால் வெறுத்துப் போன மஜீத், ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியிலிருந்து தப்பிக்க முடிவு செய்தார்.
- மஜீத்துடன் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்திருந்த ஷாகீன் தன்கிதான் இந்தியாவுக்கு தொலைபேசியில் அழைத்து மஜீத் வீரமரணடைந்துவிட்டதாக கூறியவர். ஆனால் அப்போதே ஐபி அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்றனர்.
- அதே நேரத்தில் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்த இளைஞர்கள் நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.
- இந்த இளைஞர்கள் மீட்கப்பட்டால் ஐ.எஸ். இயக்கம் குறித்து முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என்றும் கருதப்பட்டது.
- ஆரிப் மஜீத்தைத் தொடர்ந்து இதர இளைஞர்களும் இந்தியாவுக்கு விரைவில் திரும்புவர். தற்போது மஜீத்திடம் தீவிரவிசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- மஜீத்தைப் போல இதர இளைஞர்களுமே தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டுவிட்டோம் என்ற கவலையில் இருக்கின்றனர்.
- ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்த ஒரு மாதத்திலேயே தாக்கு பிடிக்க முடியாமல் நாடு திரும்பிய இவர்கள், இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கின்றனர்.
- ஐ.எஸ். இயக்கத்தினர் வசம் இருந்ததால் அவர்களால் அவ்வளவு எளிதாக இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை.
- இவர்கள் மீது வழக்கு தொடருவதா? இல்லையா என்பது குறித்து உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
- இந்த இளைஞர்களின் பெற்றோர்களிடம் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தொடர்ந்தும் தொடர்பில் இருந்து வருகின்றனர்.