ஆப்கானில் ஐ.எஸ்.ஐ.எஸ்.... 'களை' எடுக்க மோடி- நவாஸ் ஷெரீப் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை!!
டெல்லி: பிரிக்ஸ் மாநாட்டுக்காக அடுத்த வாரம் ரஷ்யா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தையின் போது ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கை ஓங்கி வருவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
ரஷ்யாவின் உஃபா நகரில் வரும் 9-ந் தேதியன்று பிரிக்ஸ் நாடுகளின் மாநாடு மற்றும் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு ஆகியவை நடைபெற உள்ளது. இவற்றில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இம்மாநாட்டின் ஒருபகுதியாக இதில் கலந்து கொள்ள வருகை தரும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். இச்சந்திப்பின் போது ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் கை ஓங்கி வருவது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கங்கள் இணைந்து பல தாக்குதல்களை நடத்த இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து வருகிறது. கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக தலிபான்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அண்மையில் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
குறிப்பாக ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம், ஆப்கானில் 4 ஆயிரம் பேரை தங்களது இயக்கத்தில் இணைத்திருக்கிறது. இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் பேராபத்தாக இருக்கும் என்பதால் இரு நாடுகளும் இந்த அபாயத்தை முறியடிப்பது குறித்து ஆலோசிக்க உள்ளன. இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து தலிபான்கள், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது.