எங்க அம்மா இறந்த கவலையில் என் உடல்நலம் பாதிக்கப்பட்டது: இந்திராணி
மும்பை: தான் எந்த மாத்திரையையும் எடுக்கவில்லை என்றும், தனது தாயின் மரணத்தால் நிலைகுலைந்துவிட்டதாகவும் இந்திராணி முகர்ஜி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி கடந்த வெள்ளிக்கிழமை ஜே.ஜே. மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் மன அழுத்தத்திற்கான மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக விழுங்கியதாக கூறப்பட்டது. சிறையில் இந்திராணிக்கு யாராவது விஷம் அளித்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து இந்திராணி சிறைக்கு திரும்பியுள்ளார். சிறையில் அவரிடம் அதிகாரிகள் வாக்குமூலம் வாங்கினர். தான் எந்த மாத்திரையையும் அளவுக்கு அதிகமாக எடுக்கவில்லை என்றும், தனது தாயின் மரணத்தை நினைத்து நினைத்து உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திராணியின் தாய் துர்கா போரா(82) உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் கடந்த வியாழக்கிழமை கவுஹாத்தியில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.