டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட்: இந்திராணிக்கு சிறையில் விஷம் அளிக்கப்பட்டதா?
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திராணி முகர்ஜிக்கு சிறையில் யாரும் விஷம் அளித்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, முன்னாள் கார் டிரைவர் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மும்பையில் பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திராணியின் உடல்நலம் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் மோசமானது.
இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மன அழுத்தத்திற்கான மாத்திரையை அளவுக்கு அதிகமாக எடுத்து தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அவரின் ரத்தம் மற்றும் சிறுநீரை பரிசோதனை செய்ததில் அதில் எந்த மருந்தும் அளவுக்கு அதிகமாக இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
மருந்துகள்
இந்திராணி சிறையில் தனக்கு அளிக்கப்பட்ட மாத்திரைகளை சேர்த்து வைத்து ஒரே நேரத்தில் அவற்றை விழுங்கியிருக்கலாம் என்று கூறப்பட்டது. அவர் தற்கொலை செய்ய சிறை அதிகாரிகள் யாரும் உதவியிருக்க மாட்டார்கள்.
சஸ்பெண்ட்
இந்திராணி தற்கொலை செய்ய சிறை அதிகாரி யாராவது உதவி செய்தது தெரிய வந்தால் அவரை சஸ்பெண்ட் செய்ய தயங்க மாட்டோம்.
விஷம்
இந்திராணிக்கு யாராவது விஷம் கொடுத்தார்களா என்று விசாரணை நடந்து வருகிறது. சிறையில் இந்திராணியை தொடர்பு கொள்ளும் அனைவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.
மருத்துவர்
சிறையில் மருத்துவர் ஒருவர் உள்ளார். அவர் கைதிகளுக்கு மருந்துகளை அளிக்கையில் அவற்றை அங்கேயே அவர் கண்முன்பு உட்கொள்ள வைப்பார். அதனால் இந்திராணி மாத்திரைகளை சேகரித்து வைத்து மொத்தமாக உட்கொள்ள வாய்ப்பே இல்லை என்றார் அந்த அதிகாரி.