மீடியாவில் வருவதெல்லாம் பொய்... ஷீனா கொலைக்கு காரணமே வேற: இந்திராணியின் மகன் பரபர பேட்டி
மும்பை: இந்திராணி தனது மகள் ஷீனாவைக் கொன்றதற்கான உண்மைக் காரணம் தனக்குத் தெரியும் என்றும், மீடியாக்களில் கூறுவதெல்லாம் பொய் என்றும் பரபரப்பு பேட்டியளித்துள்ளார் அவரது மகன் மிக்கயில் போரா.
ஸ்டார் இந்தியா சேனலின் முன்னாள் தலைமை செயலதிகாரி பீட்டர் முகர்ஜியின் 2வது மனைவி இந்திராணி முகர்ஜி ஆவார். கடந்த 2002ம் ஆண்டு பீட்டர் முகர்ஜியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் இந்திராணி.
ஏற்கனவே திருமணமான இந்திராணிக்கு முதல் கணவர் மூலம் ஒரு மகள் மற்றும் மகன் இருந்தனர். ஆனால், அவர்களைத் தனது தம்பி, தங்கை எனக் கூறி ஏமாற்றி வந்துள்ளார் அவர்.
இந்திராணி கைது...
இந்நிலையில், இந்திராணியின் கார் டிரைவர் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்ட போது, இந்திராணி அவரது மூத்த மகள் ஷீனாவைக் கொலை செய்தது அம்பலமானது. அதனைத் தொடர்ந்து, இந்திராணியின் முதல் கணவர் மற்றும் இந்திராணியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
மகனைக் காதலித்த மகள்...
ஷீனா இந்திராணியின் மகள் என்பது தனக்கு தற்போது தான் தெரியும் என பீட்டர் முகர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், பீட்டர் முகர்ஜியின் முதல் மனைக்குப் பிறந்த மகனை, ஷீனா காதலித்ததாகவும், அதன் காரணமாகவே இந்திராணி அவரைக் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
எல்லாம் பொய்...
ஆனால், இந்தக் காரணங்கள் அனைத்தும் பொய் என்றும், இந்திராணி ஷீனாவைக் கொலை செய்ததற்கான உண்மைக் காரணம் தனக்குத் தெரியும் என்றும் மிக்கயில் போரா தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 31ம் தேதி...
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "ஷீனா கொலை செய்யப் பட்டதற்கான காரணமாக ஊடகங்களில் உலா வரும் காரணங்கள் அனைத்தும் பொய். இந்திராணி தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளும் வரைக் காத்திருக்கிறேன். அவர் உண்மையான காரணங்களைக் கூறாவிட்டால், ஆகஸ்ட் 31ம் தேதி உண்மைகளை நானே கூறுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.
பீட்டருக்கும் தெரியும்...
மேலும், ‘இந்திராணியின் மகள் தான் ஷீனா என்பது தற்போது தான் தெரியும் என பீட்டர் முகர்ஜி கூறுவதும் பொய், அனைத்து உண்மைகளும் அவருக்கு ஏற்கனவே தெரியும்' என்றும் மிக்கயில் போரா கூறியுள்ளார்.
பாட்டியின் வளர்ப்பு...
ஷீனாவும், மிக்கயிலும் அஸ்ஸாமில் உள்ள இந்திராணியின் பெற்றோரால் வளர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்துப் பிரச்சினை இல்லை...
மேலும் மிக்கயில் கூறுகையில், ‘சொத்துப் பிரச்சினை எதுவும் இல்லை. நான் வசிக்கும் வீடு எனது தாத்தாவுக்குச் சொந்தமானது. இதை 30 வருடம் அவர் வைத்திருந்தார். நாங்கள் பணக்காரர்கள் அல்ல. நடுத்தர குடும்பத்தினர்தான்' என்றும் கூறியுள்ளார்.
குடும்பப் பிரச்சினை...
தனது சகோதரியின் காதல் குறித்து மிக்கயில் கூறுகையில், ‘அது குடும்பப் பிரச்சினை. அவர் ஒரு பெண். அவருக்கும் ஒரு உறவு இருந்திருக்கலாம். அதை நான் தடுக்க முடியாது' என்றார்.