தற்கொலைக்கு முயன்ற இந்திராணிக்கு நினைவு திரும்பியது... தண்ணீர் குடித்ததாக டாக்டர்கள் தகவல்
மும்பை: அளவுக்கு அதிகமான வலிப்பு மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட இந்திராணி முகர்ஜிக்கு நினைவு திரும்பியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மகள் ஷீனா போராவைக் கொலை செய்த வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இந்திராணி முகர்ஜி. கைதுக்கு பின்னரே ஷீனா போரா இந்திராணியின் தங்கை அல்ல, மகள் என்பது உட்பட பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
தனது மூன்றாவது கணவரின் மகனைக் காதலித்ததால் ஷீனாவை இந்திராணி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை முயற்சி...
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இந்திராணி. ஆனால், இந்திராணி அளவுக்கு அதிகமான வலிப்பு மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
48 மணி நேர கெடு...
தற்போது ஜே.ஜே.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார் இந்திராணி. தொடர்ந்து அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவர்கள் 48 மணி நேரம் கெடு விதித்துள்ளதாகவும் கூறப்பட்டது.
அதிகமான மாத்திரைகள்...
இந்திராணி கடந்த மாதம் 11ம் தேதியிருந்து வலிப்பு நோயை குணப்படுத்துவதற்குத் தேவையான மருந்துகள் உட்கொண்டுவருவதாக போலீஸார் அளித்த அவரது சிறை மருத்துவமனை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால். அவரது வயிற்றில் ஆய்வக பரிசோதனை மேற்கொண்டதில் அதில் மருந்துகள் உட்கொண்டதற்கான தடயம் எதுவும் இல்லை.
ஆய்வு...
எனினும், மருந்துகள் உட்கொண்டு அவை ரத்தத்துக்குள் கலந்து விட்டிருந்தால், அதனை அறியும் ஆய்வுகள் மேற்கொள்ளத் தேவையான ரத்தம், சிறுநீர் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் இன்று மாலைதான் தெரிய வரும் என ஜே.ஜே. மருத்துவமனை தலைமை மருத்துவர் டி.பி.லஹானே.
சிக்கலான காலகட்டம்...
மேலும், அனுமதிக்கப்பட்டதில் இருந்தே இந்திராணி நினைவிழந்த நிலையில் இருப்பதாகவும், தொடர்ந்து அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், அடுத்து வரும் 48மணி நேரம் மிகவும் சிக்கலான காலகட்டம் என்றும் கூறப்பட்டது.
குழப்பமான மனநிலை...
கடந்த வியாழக்கிழமை இந்திராணியின் தாயார் காலமானார். இந்தத் தகவல் கிடைத்தது முதல் குழப்பமான மனநிலையில் இருந்துள்ளார் இந்திராணி. அதனைத் தொடர்ந்தே, அவர் வலிப்பு நோய்க்கான மாத்திரைகளை ஒரே நேரத்தில், அதிக அளவில் உட்கொண்டுள்ளார். அதனையடுத்து அவர் நினைவிழந்துள்ளார்.
நீதிமன்றத்தில் மனு...
இதற்கிடையே, இந்திராணியின் நிலைமையை அறிய மருத்துவமனைக்குச் சென்ற அவரது வழக்குரைஞர் குஞ்சன் மங்களாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திராணியைக் காண, தனக்கு அனுமதி வழங்க மருத்துவமனைக்கு உத்தரவிடக்கோரி உள்ளூர் நீதிமன்றத்தில் குஞ்சன் மங்களா சனிக்கிழமை மனுத்தாக்கல் செய்தார்.
ஏற்கும்படி இல்லை...
மேலும், சிறையில் இந்திராணியை சந்தித்தபோது அவர் வலிப்பு நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்வதாகவும், மனநல மருந்துகள் உட்கொள்வதாகவும் ஒருபோதும் கூறியதில்லை. இந்நிலையில் அவர் வலிப்பு நோய்க்கான மருந்தை அதிகமாக உட்கொண்டதால் நினைவிழந்தார் என்பது ஏற்கும்படியாக இல்லை என்றும் குஞ்சன் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
உத்தரவு...
இதனை விசாரித்த நீதிபதி ஆர்.வி. அதோன், இந்திராணியின் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். மேலும் மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
பரபரப்பு...
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஷீனா கொலை செய்யப்பட்டது அம்பலமானது. அதனைத் தொடர்ந்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இந்திராணியின் இந்த திடீர் உடல்நலக் குறைபாடும், அது தொடர்பாக வெளிவரும் மாறுபட்ட கருத்துகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நினைவு திரும்பியது...
இந்நிலையில், தற்போது இந்திராணி அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாகவும், அவருக்கு நினைவு திரும்பி விட்டதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நினைவு திரும்பியதும் இந்திராணி தண்ணீர் அருந்தியதாகவும், 24 மணி நேர மருத்துவக் கண்காணிப்பிற்கு பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.
உண்மை தெரியவரும்...
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் இந்திராணியிடம் போலீசார் விசாரணை நடத்தினால், அவர் தற்கொலைக்கு முயன்றாரா என்பது குறித்து தெளிவான தகவல்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.