மேகி நூடுல்ஸின் குட்டை உடைத்த உ.பி.யில் குளுகோன் டி பாக்கெட்டில் பூச்சிகள்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் சக்தி அளிக்கும் குளுகோன் டி பாக்கெட்டில் பூச்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதசே மாநிலத்தில் தான் மேகி நூடுல்ஸை ஆய்வு செய்து அதில் மோனோசோடியம் க்ளூட்டமேட் மற்றும் ஈயம் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அதே உத்தர பிரதேசத்தில் குளுகோன் டி பாக்கெட்டில் பூச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் புலந்சாஹர் நகரைச் சேர்ந்தவர் பப்லு. அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலசரக்கு கடைக்கு சென்று குளுகோன் டி பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். வீட்டுக்கு வந்து குளுகோன் டியை கலக்கி அவரும், அவரது குடும்பத்தாரும் குடித்துள்ளனர். அதை குடித்த சிறிது நேரத்தில் அனைவரும் வாந்தி எடுக்கத் துவங்கியுள்ளனர்.
அதன் பிறகு தான் குளுகோன் டி பாக்கெட்டில் பூச்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பப்லு மருந்து பாதுகாப்பு அதிகாரி சிவதாஸிடம் புகார் அளித்துள்ளார். பப்லுவின் புகாரை அடுத்து அவர் வாங்கிய கடையில் இருந்து 4 குளுகோன் டி பாக்கெட்டுகளை பெற்று சோதனைக்காக லக்னோவில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வு முடிவு வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவதாஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த ஹெச்.ஜே. ஹெய்ன்ஸ் நிறுவனம் தான் குளுகோன் டியை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.