டாடா சன்ஸ் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கம் ஏன்? பின்னணியில் 5 காரணங்கள்!
மும்பை: 2012ல் டாடா சன்ஸ் குழுமத் தலைவராக நியமிக்கப்பட்டவர் சைரஸ் மிஸ்திரி. இவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு டாடா சன்ஸ் நிறுவன இடைக்காலத் தலைவராக ரத்தன் டாட்டா செயல்படுவார் என்று போர்டு மீட்டிங்கில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, புதிய தலைவரைத் தேர்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியில், ரத்தன் டாடா, வேணு ஸ்ரீநிவாசன், அமித் சந்த்ரா, ரோனன் சென் மற்றும் லார்ட் குமார் பட்டாச்சாரியா ஆிகயோர் இடம்பிடித்துள்ளார்கள். இன்னும் 4 மாதங்களுக்குள் புதிய தலைவரை இந்த கமிட்டி தேர்ந்தெடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை வட்டாரங்களில் இந்த தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சைரஸ் மிஸ்திரி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தொழில்துறை வட்டாரங்கள் கூறியது இதுதான்:
1.ஒட்டுமொத்த குரூப் என்ற அளவில், டாடா சன்ஸ்சுக்கு இது போதாத காலம். டாடா ஸ்டீல் நிறுவனத்தின் இந்த நிதியாண்டின் முதலாவது காலாண்டு நிகர நஷ்டம் எவ்வளவு தெரியுமா? ரூ.3000 கோடிக்கும் மேல். ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியதை தொடர்ந்து, ஐரோப்பிய வணிகத்தில் டாடா ஸ்டீலுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது. ஏற்கனவே ஐரோப்பாவில் நஷ்டத்தில் இயங்கிவந்த டாடா ஸ்டீலுக்கு, பிரிட்டன் வெளியேறியது பெரும் பின்னடைவாகியது.
2.டாடா டெலிகாம் சர்வீஸ் இப்போதுதான் பல பகுதிகளிலும் 3ஜி நெட்வொர்க் டவர்களையே அமைத்துக்கொண்டுள்ளது என்ற விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஜப்பானின் டெலிகாம் நிறுவனமான டொகோமோ டாடாவுடன் இணைந்து செயல்பட்டு வந்த நிலையில், அதன் பிரிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
3.மிஸ்திரி பதவியேற்கும்போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், வருடத்திற்கு 2 வாகனங்களையாவது அறிமுகப்படுத்த வழி செய்வேன் என உறுதியளித்திருந்தார். ஆனால் அதை செய்ய முடியவில்லை. டாடா நிறுவனத்தின் டியாகோ மற்றும் போல்ட் வகை கார்கள் மார்க்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. டாடாவின் அதிக விலை பிரிவு கார்களான ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் ஆகியவற்றின் உற்பத்தி பிரிவு ஐரோப்பாவிலுள்ள நிலையில், பிரிட்டனின் பிரிவு அந்த கார்கள் உற்பத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
4. டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (டிசிஎஸ்) போன்ற நன்கு லாபமீட்டக் கூடிய தொழில்களில் மட்டுமே மிஸ்திரி கவனத்தை வைத்திருந்ததாகவும், கஷ்டப்படும் பிற தொழில்களை கண்டுகொள்ளவில்லை எனவும் ரத்தன் டாடாவுக்கு வருத்தம் இருந்ததாக சில மீடியா செய்திகள் தெரிவிக்கின்றன.
5.டிசிஎஸ் மற்றும் சிறப்பாக செயல்பட்ட அதே நேரத்தில், கெமிக்கல், கமாடிட்டி துறைகள் சரிவையே சந்தித்தன. தனது பாதுகாப்பான பகுதியை விட்டு டாடா நிறுவனத்தை முன்நகர்த்த மிஸ்திரி தவறினார்.