கை, கால்களை வளைத்து யோகா செய்யத் தயாராகும் கடற்படை!
பெங்களூரு: இந்தியா முழுவதும் யோகா ஜூரம் ஆட்டிப் படைக்கிறது. எங்கு பார்த்தாலும் யோகா யோகா என்ற பேச்சாகவே உள்ளது. சர்வதேச யோகா தினத்தையொட்டி மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக யாரைப் பார்த்தாலும் யோகா பற்றி பாசிட்டிவாகவோ அல்லது நெகட்டிவாகவோ பேசிக் கொண்டுள்ளதைக் காண முடிகிறது.
சோசியல் மீடியாக்களில் யோகா தினம் குறித்த பேச்சாகவும், எழுத்தாகவும் உள்ளது. இந்த நிலையில் இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் கமோர்தாவில் கடற்படை மாலுமிகள் யோகா பயிற்சி செய்வது குறித்த புகைப்படத்தை பிரதமர் மோடி வெளியிட அது இப்போது வேகமாக டிவிட்டர் உள்ளிட்டவற்றில் பரவி வருகிறது.
கமோர்தா, இந்தியாவிலேயே தயாரிக்கபப்ட்ட போர்க்கப்பலாகும். கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் என்ற நிறுவனத்தால் கட்டப்பட்ட கப்பல் இது. கடந்த ஆண்டுதான் இந்தியக் கடற்படைக்கு இது அளிக்கப்பட்டது.
மோடி கூறியபடி, ‘யோகாவானது மனதையும், உடலையும் ஒருங்கிணைக்கிறது. செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்கான வேகத்தைத் தருகிறது' என்று கடற்படையினர் கூறுகிறார்கள்.
முதலாவது சர்வதேச யோகா தினம் குறித்து கடற்படையினருக்கு உரிய முறையில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகின் பல பகுதிகளில் உள்ள இந்தியக் கடற்படையினருக்கு சர்வதேச யோகா தினத்தன்று யோகாசனம் செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
மேலும் சர்வதேச யோகா தினத்தன்று காலை 7 மணிக்கு யோகாசன நிகழ்ச்சியை கடற்படையினர் நிகழ்த்தவுள்ளனர். அதே நேரத்தில்தான் டெல்லியில் ராஜ்பாத்தில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மும்பையில் பிரமாண்டமான முறையில் கடற்படையினர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கான ஒத்திகை ஐஎன்எஸ் விராத் கப்பலில் நடந்து வருகிறது.