"விருமாண்டி" ஜெயில் பிரேக் போல... திகார் ஜெயிலைத் தகர்க்க தீவிரவாதிகள் திட்டம்!
டெல்லி: டெல்லியில் அமைந்துள்ள திகார் ஜெயிலை தீவிரவாதிகள் தகர்க்க முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் 3 அடுக்கு பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள மத்திய சிறைச் சாலையான திகார் ஜெயில் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய சிறையாகும்.
இந்த சிறையில் சுமார் 7 ஆயிரம் கைதிகளை வைக்கவே வசதி உள்ளது. ஆனால் தற்போது சுமார் 13 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய "தலை"களின் சிறைச்சாலை:
முக்கிய வழக்குகளில் சிக்கும் அரசியல்வாதிகள், பிரபலங்கள் திகார் ஜெயிலில் அடைக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்திய தேசிய லோக்தளம் கட்சித் தலைவர் ஓம்பிரகாஷ் சவுதாலா இப்போது இந்த சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளார்.
ராசா - கனிமொழி இருந்த இடம்:
அதேபோல 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான ராசா, கனிமொழி ஆகியோரும் கூட இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர்.
தீவிரவாதிகளும் தஞ்சம்:
பிரபலங்கள் தவிர நாடெங்கும் பிடிபடும் தீவிரவாதிகளும் டெல்லி திகார் ஜெயிலில்தான் அடைக்கப்படுகிறார்கள். தீவிரவாதிகளை அடைத்து வைத்திருப்பதற்காக திகார் ஜெயில் வளாகத்தில் தனிப்பகுதி உள்ளது. அங்கு பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.
எண்ணற்ற பயங்கரவாதிகள்:
பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் இந்தியன் முஜாகிதீன் மற்றும் சிமி தீவிரவாதிகளும் ஏராளமானோர் திகார் ஜெயிலுக்குள் உள்ளனர். அவர்களை வெளியில் விட்டால் நிச்சயம், மீண்டும் நாசவேலை முயற்சிகளில் ஈடுபடுபவார்கள் என்பதால் அவர்களை நிரந்தரமாக அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பலர் பட்டியலில் உள்ளனர்.
மீட்பதற்கு கடும் முயற்சி:
இதில் வெடிகுண்டு தயாரிக்கும் தீவிரவாதிகளும் அடங்குவார்கள். அவர்களை எப்படியாவது மீட்க வேண்டும் என்பது லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளின் திட்டமாகும். இதற்காக அவர்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
திகாரை தகர்க்க திட்டம்:
இந்த நிலையில் சமீபத்தில் தீவிரவாதிகளின் பேச்சை இடைமறித்து கேட்ட உளவுத் துறையினர், டெல்லி திகார் ஜெயிலை தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி தகர்த்து விட்டு, தங்கள் கூட்டாளிகளை மீட்க தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதை அறிந்தனர்.
சங்கேத வார்த்தை தகவல்கள்:
திகார் ஜெயிலின் எந்த பகுதியில் தாக்குதல் நடத்த வேண்டும்? அந்த சமயத்தில் கூட்டாளிகளை எப்படி மீட்க வேண்டும் என்று அவர்கள் சங்கேத வார்த்தைகள் மூலம் தகவல்களை பரிமாறி கொண்டதும் தெரிய வந்தது.
கெடுபிடியாகும் பாதுகாப்பு:
இந்த தாக்குதலுக்காக லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தனிப்படை ஒன்றை உருவாக்கி பயிற்சி அளித்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திகார் ஜெயில் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கும்படி மத்திய உள்துறையை உளவுத்துறை கேட்டுக் கொண்டது. அதன்படி இன்று முதல் திகார் ஜெயிலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மூன்றடுக்கு பாதுகாப்பு:
ஏற்கனவே திகார் ஜெயிலுக்கு மத்திய ரிசர்வ் போலீசார் 3 அடுக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். சிறையின் ஒரு பகுதி பாதுகாப்பை தமிழ்நாடு போலீசார் ஏற்றுள்ளனர். தீவிரவாதிகள் மிரட்டலை தொடர்ந்து திகார் ஜெயிலை சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரகசிய கேமரா கண்காணிப்பு:
திகார் ஜெயிலை இணைக்கும் அந்த பாதைகளிலும் ரகசிய காமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. திகார் ஜெயில் டி.ஐ.ஜி. முகேஷ் பிரசாத் கூறுகையில், "ஜெயிலை நெருங்கும் வாகனங்கள், தனி நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். ஜெயிலுக்கு வெளியே பல தடுப்புகள் அமைத்து சோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளோம்" என்றார்.
பாதுகாப்பு தீவிரம்:
திகார் ஜெயிலில் கைதிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கிழக்கு டெல்லியில் உள்ள மண்டோலி, நரோலா, பாப்ரோலா பகுதிகளில் திகார் ஜெயிலின் கிளைகள் ரூபாய் 169 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன. அந்த பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.