எதிர்காலத்தில் இணையதளம் மூலம் வாக்களிப்பது சாத்தியமே – தேர்தல் ஆணையர் ஹெ.எஸ்.பிரம்மா
டெல்லி: இணையதளம் மூலம் வாக்களிப்பது எதிர்காலத்தில் சாத்தியமான ஒன்றுதான் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஹெச்.எஸ்.பிரம்மா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வாக்குப்பதிவில் ஏற்படக் கூடிய தவறுகளை முற்றிலும் களைவதே தேர்தல் ஆணையம் அடைய வேண்டிய முதல் இலக்கு என்றும் கூறினார்.
எனினும், இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்த ஏராளமான நிதி, போதிய உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சிகள் ஆகியவை தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
டெல்லியில் வாக்களிப்பதற்காக தாம் வரிசையில் நின்ற போது, தமக்கு முன்னால் வரிசையில் நின்றிருந்த இளைஞர்கள், இணையதளம் மூலம் வாக்களிக்கும் வசதி இருந்தால் ஏராளமான நேரத்தையும், மனித உழைப்பையும் மிச்சப்படுத்த முடியும் என்று பேசிக்கொண்டதாக தலைமைத் தேர்தல் ஆணையர் பிரம்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆனால், மக்களவையில் இது குறித்த கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சதானந்த கவுடா, இணையதளம் மூலம் வாக்களிக்கும் நடைமுறையைச் செயல்படுத்தும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.