ஐபிஎல் மோசடி: லலித் மோடிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்- மும்பை கோர்ட் அதிரடி
மும்பை: ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியை கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை மும்பை நிதி மோசடி சட்ட சிறப்பு கோர்ட் பிறப்பித்துள்ளது.
ஐபிஎல் தலைவராக இருந்த லலித் மோடி ரூ.470 கோடி அளவுக்கு நிதி மோசடியில் ஈடுபட்டார் என்று 2010ம் ஆண்டு, பிசிசிஐ சார்பில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில், லலித் மோடியை கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் அளிக்க அமலாக்கத்துறை சார்பில், மும்பையிலுள்ள நிதி மோசடி சட்ட சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஏற்கனவே பலமுறை, மோடிக்கு, அமலாக்கத்துறை, நினைவூட்டல் கடிதங்களை எழுதி, விசாரணைக்கு ஆஜராக கேட்டுக்கொண்டும், அவர் வெளிநாட்டிலேயே தொடர்ந்து வசித்துவருகிறார். தனக்கு தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதால், இந்தியாவுக்கு வர முடியாது என்று லலித் மோடி கூறிவருகிறார். எனவே, அவரை கைது செய்ய அமலாக்கத்துறை அனுமதி கேட்டது.
இதையேற்ற நீதிமன்றம், லலித் மோடியை ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. தற்போது இங்கிலாந்திலுள்ள லலித் மோடியை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், சுஷ்மா சுவராஜ் மீதான குற்றச்சாட்டின் தீவிரம் தணியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.